Senthil Balaji : ‘அடுத்தடுத்து செக்’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Senthil Balaji Case Update : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

Sep 1, 2024 - 07:22
Sep 1, 2024 - 12:15
 0
Senthil Balaji : ‘அடுத்தடுத்து செக்’ - செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு
செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு

Senthil Balaji Case Update  : கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி (Senthi Balaji) மீது அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கு பணம் பெற்றுக்கொண்டு வேலை வாங்கிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக 3 மோசடி வழக்குகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளின் அடிப்படையில் அவர் சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில்(Money Laundering Case) ஈடுபட்டுள்ளதாகக் கூறி அவரை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்தாண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்தனர். கடந்த ஓராண்டுக்கு மேலாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள செந்தில்பாலாஜி ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை உயர்நீதிமன்றமும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

இதனிடையே, இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, கடந்த ஆக.8-ம் தேதியன்று செந்தில் பாலாஜி மீதான குற்றச்சாட்டைப் பதிவு செய்தார். அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பொய்யாக பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும், அமலாக்கத்துறையின் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வில் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு சார்பில் ஒரு வாரத்தில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, விசாரணையை வரும் செப்டம்பர் 4ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் தெரிவித்துள்ளது. மேலும், அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞராக வாஷிங்டன் தனசேகரனை தமிழக அரசு நியமித்துள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு, நாளை திங்கட்கிழமை [02-09-24] உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. கடந்த ஓராண்டுக்கு மேல் சிறையில் வாடும் செந்தில் பாலாஜிக்கு, ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர ஆளுநர் அனுமதி வழங்கி உள்ளது மேலும் சிக்கலை ஏற்படுத்துவதாக உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow