தமிழகத்தில் தலித் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்க.. மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
Armstrong Murder Case : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணையை தமிழ்நாடு அரசு சி பி ஐ க்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார்.
சென்னை: ஆம்ஸ்ட்ராங் ஒரு வலிமையான தலித் தலைவர் அவரது கொலை வழக்கை சி பி ஐ விசாரிக்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள தலித் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள ராம்தாஸ் அத்வாலே, ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான தனது விசாரணை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை நேரில் சந்தித்து அளிக்க உள்ளதாக கூறியுள்ளார்.
மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பெரம்பூரில் கடந்த வாரம் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது மனைவியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், கடந்த பல ஆண்டுகளாக தலித் மக்களுக்காக உழைத்திருக்கிறார் ஆம்ஸ்ட்ராங். அவர் ஒரு வலிமையான தலித் தலைவர். ஆனால் சிலர் அவரை படுகொலை செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கைது செய்யப்பட்டவர்கள் மட்டுமல்லாமல் இதில் பின்னே இருந்து இயக்கியவர்ககள் கண்டறியப்பட வேண்டி உள்ளது. காவல் ஆணையரை மட்டும் மாற்றினால் போதாது. ஒரு தலித் தலைவருக்கு இந்த மாநிலத்தில் பாதுகாப்பு இல்லை. ஆம்ஸ்ட்ராங் ஒரு வலிமையான தலித் தலைவர். நிச்சயம் அவரது கொலை வழக்கை சி பி ஐ விசாரிக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள தலித் தலைவர்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
கருணாநிதி ஒரு சிறந்த மனிதர். கருணாநிதி ஒரு காலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தவர். ஆனால் தற்போது ஸ்டாலின் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கிறார். எப்போதும் அரசியல் மாற்றங்கள் இருக்கும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். எனது கோரிக்கைகளை ஸ்டாலின் கேட்பார் என நம்புகிறேன்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவு வலிமையாக உள்ளது. தற்போது இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி நிச்சயம் 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும். மாநில காவல்துறையின் விசாரணை முழுமையானதாக இல்லை. கொலை செய்ய திட்டமிட்டவர்கள் தற்போது வரை கைது செய்யப்படவில்லை எனவே தான் சி பி ஐ விசாரணை வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
பல வழக்குகள் சிபிஐயிடம் நிலுவையில் இருந்தாலும் பல வழக்குகளை சி பி ஐ சிறப்பாக கையாண்டு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் கொலை சம்பவத்தில் பாஜகவிற்கு சம்மந்தம் உள்ளது எனும் குற்றச்சாட்டுகளுக்கு ஒரு பதில்தான் தமிழகத்தில் பாஜக எந்த விதமான குற்றம் செய்யும் கட்சிகளுடன் கூட்டணியில் இல்லை.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பான எனது விசாரணை அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வை சந்தித்து கொடுக்க உள்ளேன் என்று தெரிவித்தார் ராம்தாஸ் அத்வாலே.
What's Your Reaction?