Coimbatore Mayor : கோவை மேயர் பதவி.. எதிர்பார்த்து ஏமாந்த மீனா லோகு.. காருக்குள் கலங்கிய கண்கள்

Coimbatore Mayor Election : கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மேயர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த மீனா லோகு உடைந்து அழுத காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Aug 5, 2024 - 16:50
Aug 6, 2024 - 10:08
 0
Coimbatore Mayor : கோவை மேயர் பதவி.. எதிர்பார்த்து ஏமாந்த மீனா லோகு.. காருக்குள் கலங்கிய கண்கள்
Meena Logu on Coimbatore Mayor Election 2024

Coimbatore Mayor Election : கோவை மாநகராட்சி திமுக மேயர் வேட்பாளராக ரங்கநாயகி அறிவிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து மேயர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த மீனா லோகு உடைந்து அழுத காட்சி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை:கோவை மாநகராட்சி மேயர் வேட்பாளராக திமுக சார்பில் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்த பதவியை எதிர்பார்த்து காத்திருந்த மீனா லோகு காருக்குள் அமர்ந்து கண்ணீர் விட்ட காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2022ஆம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளை கைப்பற்றியது. அதில், 73 வார்டுகளில் திமுக நேரடியாக வெற்றி பெற்றது. திமுக கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ் 9 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலா 4 வார்டுகளிலும், மதிமுக 3 வார்டுகளிலும், கொமதேக 2 வார்டுகளிலும், மமக 1 வார்டிலும் வெற்றி பெற்றது.

அதிமுக 3 வார்டுகளிலும், எஸ்.டி.பி.ஐ 1 வார்டிலும் வெற்றி பெற்றது. பின்னர், திமுக தலைமையால் அறிவிக்கப்பட்ட கல்பனா ஆனந்தகுமார், மேயர் பதவிக்கு ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம் கோவை மாநகராட்சியின் ஆறாவது மேயர் மற்றும் முதல் பெண் மேயர் என்ற பெருமையை கல்பனா பெற்றார். இதேபோல திமுகவின் முதல் மேயர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். 

செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமார், மணியகாரன்பாளையம் பகுதியை சேர்ந்தவர். 42 வயதான இவர், கோவை மாநகராட்சி 19 வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்று, முதல் முறையாக மாமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார். அப்பகுதி திமுக பொறுப்பாளராக உள்ளார். எளிய குடும்ப பின்னணியை சேர்ந்த கல்பனா ஆனந்தகுமார், அப்பகுதியில் இ -சேவை மையம் நடத்தி வந்தார். 

கோவை மாநகராட்சி மேயராக பலரும் போட்டியிட்ட நிலையில், யாரும் எதிர்பாராத வகையில் அவருக்கு மேயர் பதவி கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கல்பனா ஆனந்தகுமார் மேயராக பொறுப்பெற்ற பின்னர், அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என புகார்கள் வந்தன. அதேபோல தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கி வந்தார்.

ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மேயர் பங்களாவில் ஒரு கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகளை செய்ததும், பின்னர் அமானுஷய பயம் காரணமாக அப்பங்களாவில் தங்காமல் விட்டதும் சர்ச்சையானது. மணியகாரன்பாளையம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே வசிக்கும் சரண்யாவை காலி செய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும், வீட்டை காலி செய்ய வைப்பதற்காக அழுகிய பொருட்களை வீசுவதாகவும், சமையலறை அருகில் சிறுநீரை பிடித்து ஊற்றுவதாகவும் புகார் எழுந்ததும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறை சென்ற போது, சில ஆவணங்களை கல்பனாவின் தம்பி குமார் எரித்தாகவும் புகார் எழுந்தது. பல்வேறு இடங்களில் கல்பனாவின் கணவர் ஆனந்தகுமார் பணம் கேட்டதாகவும், ஒப்பந்தாரர்களிடம் மேயர் கல்பனா கமிஷன் கேட்டதாகவும் புகார்கள் வந்தன. செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான கல்பனா ஆனந்தகுமாருக்கும், அமைச்சர் கே.என். நேருவிற்கும் இடையே மோதல்கள் இருந்ததாக தகவல் வெளியானது. 

அதேபோல திமுக கவுன்சிலர்களை அரவணைத்து செல்லாததால், கவுன்சிலர்கள் மேயர் கல்பனாவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர்.மாநகராட்சி மண்டலத்தில் இருந்து அனுப்பப்படும் கோப்புகள் அனைத்தையும் மேயர் கல்பனா உள்நோக்கத்துடன் நிறுத்தி வைப்பதாகவும், தனிபட்ட வன்மத்துடன் மேயர் கல்பனா செயல்படுவதாகவும் மத்திய மண்டல தலைவர் மீனாலோகு குற்றம்சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

மாநகராட்சியில் அதிகாரிகளுடன் மோதல் போக்கை கடைபிடித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் கோவை மாநகராட்சி மேயரை மாற்ற வேண்டுமென திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புகார் அளித்தனர். கல்பனா ஆனந்தகுமாரின் செயல்பாடுகள் பலருக்கும் அதிருப்தியை தந்தது. இதனையடுத்து கடந்த மாதம் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்தார் கல்பனா.


மேயர் பதவியில் இருந்து கல்பனா ராஜினாமா செய்ததை அடுத்து அடுத்த மேயராக யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதியின் மகளான நிவேதா சேனாதிபதி மேயர் போட்டியில் இருந்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்டச் செயலாளருமான சிங்காநல்லூர் கார்த்திக்கின் மனைவி இளஞ்செல்வியும் மேயர் ரேஸில் இருந்தார். ஆசிரியர் பணியை துறந்துவிட்டு அரசியலுக்கு வந்த மீனா லோகுவும்  மேயர் ரேஸில் இருந்த நிலையில் இன்றைய தினம் மேயர் வேட்பாளர் பெயரை அறிவித்தார் அமைச்சர் கே.என். நேரு.

கோவை மாநகராட்சியின் 29ஆவது வார்டு கவுன்சிலராக உள்ள ரங்கநாயகியின் பெயரை மேயர் வேட்பளராக அறிவித்துள்ளார் அமைச்சர் கே.என்.நேரு. மேயர் ரேஸில் லிஸ்டிலேயே இல்லாத ரங்கநாயகியின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளதால் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த பலரும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியானது. 

மேயர் வேட்பாளர் ரேஸில் இருந்த மீனா லோகு பதவி கிடைக்காத நிலையில் உடைந்து போய் விட்டார். கண்ணீர் விட்டு அழுத மீனா லோகு கண்களை துடைத்தவாறு காரில் ஏறி புறப்பட்டார். அவர் காரில் ஏறி கதறி அழுத காட்சிகள் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளன.கடந்த முறையே மேயர் பதவியை எதிர்பார்த்த மீனா லோகுவிற்கு பதவி கிடைக்கவில்லை. செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் கல்பனாவிற்கு பதவி கிடைத்தது. 

இப்போது மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள ரங்கநாயகியும் மாஜி அமைச்சர் செந்தில் பாலாஜி சாய்ஸ் என்றே கூறப்படுகிறது. 29வது வார்டு கவுன்சிலர் ரங்கநாயகி, முதல் முறை கவுன்சிலர் என்பது குறிப்பிடத்தக்கது.எளிய பொருளாதார பின்புலத்தைக் கொண்ட ரங்கநாயகிக்கு கட்சித் தலைமை வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow