நிதி ஆயோக்கில் மைக் ஆஃப்.. கொந்தளித்த மம்தா பானர்ஜி.. முதல்வரை இப்படியா நடத்துவது? ஸ்டாலின் ஆவேசம்
CM Stalin Tweet on BJP Government : நிதி ஆயோக் கூட்டத்தில் ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது என்று தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
CM Stalin Tweet on BJP Government : பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடக்கும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் உள்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னை அவமதித்ததாக கூறி கூட்டத்தில் இருந்து கோபமாக வெளிநடப்பு செய்தார். ஒரு மாநில முதல்வரை இப்படியா நடத்துவது என்று கேள்வி எழுப்பியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழுவின் 9வது கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று டெல்லியில் உள்ள குடியரசு மாளிகையில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்நிலையில் தான் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக 'இந்தியா' கூட்டணி கட்சியினர் ஆளும் முதல்வர்கள் அறிவித்தனர்.
அதன்படி தமிழக முதல்வர் முக ஸ்டாலின், கா்நாடக முதல்வர் சித்தராமையா, இமாச்சல பிரதேச முதல்வர் சுக்வீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்டவர்கள் புறக்கணிப்பதாக அறிவித்தனர்.
இருப்பினும் கூட இந்தியா கூட்டணியில் உள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி பேசினார். அப்போது அவருக்கு 5 நிமிடங்கள் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மம்தா பானர்ஜி கூடுதல் நேரம் கேட்ட நிலையில் அவரது மைக் ஆப் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த கூட்டத்தில் பாஜகவின் முதல்வர்கள், பாஜக கூட்டணியில் உள்ள முதல்வர்களுக்கு 10 முதல் 20 நிமிடம் வரை பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் கோபமான மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து பாதியில் வெளிநடப்பு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி, மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று நான் கூறினேன். நான் பேச விரும்பினேன், ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். 10-20 நிமிடம் நான் மட்டுமே பங்கேற்றேன், ஆனால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை என்று கூறினார்.
இந்த நிலையில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார் முதல்வர் ஸ்டாலின், அவர் தனது ட்விட்டர் பதிவில், இதுதான் கூட்டுறவு கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா? என்று கேட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை மத்திய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
கூட்டுறவு கூட்டாட்சிக்கு அனைத்து குரல்களும் பேசவும் மரியாதையும் தேவை என்று கூறியுள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின்.
What's Your Reaction?