ஆம்ஸ்ட்ராங் கொலை.. நேரில் ஆறுதல் சொன்ன முதல்வர் ஸ்டாலின்.. கண் கலங்கிய குடும்பத்தினர்
மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது மனைவிக்கு ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின். ஆம்ஸ்ட்ராக் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
பெரம்பூரில் கடந்த ஜூலை 5ஆம் தேதி இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு பொத்தூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு பல அரசியல் கட்சியினர் நேரில் சென்று ஆறுதல் கூறினர். நேற்று அவரது இல்லத்திற்கு சென்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "பகுஜன் சமாஜ் கட்சியில் 20 ஆண்டுகளாக மாநிலத் தலைவராக இருந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு நம்மை விட்டு பிரிந்துள்ளார்.
தமிழ்நாட்டில் இது போல் நடந்தது இல்லை, ஒரு அரசியல்வாதி யை அவரது வீட்டின் வெளியே கூலிப்படையினரைக் கொண்டு கொலை செய்துள்ளார்கள். தமிழ்நாடு பாஜக சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரிக்கை வைக்க உள்ளோம் என்று கூறினார்.
இந்த படுகொலை சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
இந்த நிலையில் இன்றைய தினம் முதல்வர் ஸ்டாலின்,அயனாவரத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். மறைந்த ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடிக்கும் ஆறுதல் கூறினார் முதல்வர் ஸ்டாலின்.
What's Your Reaction?