டெல்லி மாநில முதல்வராக 21ல் பதவியேற்கிறார் அதிஷி.. 6 மாதங்களில் சாதிப்பாரா?
டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து புதிய முதல்வராக மூத்த அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆளுநரை சந்தித்து புதிய முதல்வராக தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதையும் அதிஷி வழங்கினார்.
டெல்லி மாநில முதல்வராக வரும் 21ஆம் தேதி பதவியேற்கிறார் அதிஷி.அடுத்த 6 மாத காலத்துக்கு மட்டுமே அதிஷி முதல்வராக பதவி வகிக்க உள்ள நிலையில் அவர் முன் உள்ள சவால்களை சமாளிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் சில நாட்களுக்கு முன்பு ஜாமின் வழங்கியது. ஆனால் ஜாமின் நிபந்தனைகளாக முதல்வர் அலுவலகம் செல்லக் கூடாது, முதல்வர் கோப்புகளை கையாளக் கூடாது எனவும் அதிரடியாக உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். இதனால் முதல்வர் பதவியில் தொடர முடியாத நிலை கெஜ்ரிவாலுக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து டெல்லியில் கடந்த வாரம் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகளிடையே பேசிய கெஜ்ரிவால், செப்டம்பர் 17ஆம் தேதி தாம் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருக்கிறேன். டெல்லி சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில்தான் தேர்தல் நடைபெற வேண்டும். ஆனால் முன்கூட்டியே நவம்பரிலும் தேர்தல் நடத்த பரிந்துரைப்போம். அப்படி முன்கூட்டியே தேர்தல் நடைபெறாத நிலையில் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்படுவார் என அதிரடியாக அறிவித்தார்.
இதனால் டெல்லி அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மூத்த அமைச்சர் அதிஷி பெயரை முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். இதனையடுத்து அதிஷி ஒருமனதாக, புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இதனைத் தொடர்ந்து இது தினங்களுக்கு முன்பு துணை நிலை ஆளுநரை சந்தித்து தமது டெல்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் கொடுத்தார்.
டெல்லி முதலமைச்சராக பதவியேற்கும் 3ஆவது பெண் அதிஷி மர்லேனா ஆவார். சுஷ்மா ஸ்வராஜ், ஷீலா தீட்சித்தை தொடர்ந்து டெல்லி முதலமைச்சராக வரும் 21ஆம் தேதி அதிஷி பதவியேற்க உள்ளார்.
டெல்லி யூனியன் பிரதேசம் என்பதால் முதல்வர், அமைச்சர்கள் நியமனம் தொடர்பாக குடியரசுத்தலைவர்தான் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இது தொடர்பாக டெல்லி துணை ஆளுநர், குடியரசுத்தலைவருக்கு பரிந்துரைகளை அனுப்புவார். இதன்படி டெல்லியில் வரும் 21ஆம் தேதி புதிய முதல்வராக அதிஷி மற்றும் அவரது அமைச்சரவை பதவியேற்க குடியரசுத்தலைவருக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் பரிந்துரைத்துள்ளார்.
குடியரசுத்தலைவர் உத்தரவிட்ட பின்னர் அதிஷியும் அவரது அமைச்சரவையும் பதவியேற்கும். சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும். டெல்லி யூனியன் பிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும். ஆகையால் அடுத்த 6 மாத காலத்துக்கு மட்டுமே அதிஷி முதல்வராக பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?