அரசு பள்ளிகளின் தரத்தை குறை கூறிய ஆளுநர்.. உதயநிதி பதிலடி.. அன்பில் மகேஷ் சொன்னது பாருங்க!
ஆளுநர் ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். இது போன்று கருத்துக்கள் பரவுவதும் வரவேற்க தக்கது தான். அதனால் தான் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களும் எங்கு சிறப்பான பணியில் உள்ளார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
யார் யாரோ நம்மை பார்த்து சொல்லும் கருத்துக்களை நாம் அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். நாம் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெருமையாக சொன்னால் போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக ஆளுநராக ஆர்.என் ரவி பதவியேற்றதில் இருந்தே அரசுடன் பனிப்போர் தொடங்கி விட்டது. சட்டசபையில் ஆளுநர் உரை வாசிப்பதில் தொடங்கி இப்போது அரசுப்பள்ளிகளை குறை கூறுவது வரை நீடிக்கிறது. புதிய கல்விக்கொள்கையை தமிழக அரசு ஏற்க தயாராக இல்லை. அதே நேரத்தில் அரசுக்கு எதிராக அவ்வப்போது பேசி வருகிறார் ஆளுநர்.
தரமில்லாத அரசுப்பள்ளிகள்:
சென்னை ஆளுநர் மாளிகையில் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ’think to dare’ என்கிற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள் மத்தியில் உரையாற்றிய தமிழக ஆளுநர் ரவி, “காமராஜர் கல்வியின் ஆற்றலை புரிந்திருந்தார். அதனால் பல கல்விகூடங்களை அவர் திறந்தார். மேலும் மதிய உணவை அவர் மாணவர்களுக்கு வழங்கினார். அவர் ஏற்படுத்திய கட்டமைப்பில் நாம் பயணித்தோம். ஆனால் இன்று இந்த காலக்கட்டத்தில் அந்த தொலைநோக்கு பார்வை இல்லை. அரசு பள்ளிகளின் தரம் குறைந்து, 70 சதவிகிதம் மாணவர்கள் எண்களை படிக்க முடியாமலும், 40 சதவிகிதம் மாணவர்கள் எழுத்துக்களை படிக்க முடியாமலும் இருக்கின்றனர் என்று குற்றம் சாட்டினார்.
மேலும், தமிழகத்தில் கல்விதரம் குறைந்திருக்கிறது. மாணவர்களின் கற்கும் திறன் குறைந்தும் அவர்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இதனால் வேலை வாய்பின்மை ஏற்படுகிறது. மாணவர்கள் போதைக்கு அடிமை ஆகியுள்ளனர். மாணவர்கள் கஞ்சா மட்டுமில்லாமல் ஹாராயின், மெத்தபொட்டமைன் போன்ற Chemical synthetic drugsகளுக்கும் அடிமையாகி உள்ளதாகவும் கூறினார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
தமிழக ஆளுநரின் பேச்சுக்கு அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பதிலடி கொடுத்து வருகின்றனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, சென்னை வண்டலூரில் நடந்த நல்லாசிரியர் விருது வழங்கும் விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆசிரியர் தின விழா கலந்துகொண்டு, 375 ஆசிரியர்கள்களுக்கு டாக்டர். இராதாகிருஷ்ணன் விருதினை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாணவர்களை சுயமாக சிந்திக்க வைக்கும் கல்விதான் சிறந்த கல்வி. அந்த வகையில் பார்த்தால், இந்தியாவிலேயே தமிழகத்தின் கல்விதான் சிறந்த கல்வி. தமிழகத்தின் பாடத்திட்டத்தை படித்த பலர் விஞ்ஞானிகளாக, மருத்துவர்களாக உள்ளனர். சிலர் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், வயிற்று எரிச்சலில் உள்ளனர், என்று பதிலளித்திருந்தார்.
சென்னை சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்தில் தனியார் பள்ளி சார்பில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் மற்றும் சேகர் பாபு பங்கேற்றனர்.
தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,1 கோடிக்கு மேல் படிக்கும் அரசு பள்ளி மட்டுமல்லாமல் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் எங்கள் மாணவர்கள் தான். தலைமை நீதிபதியே அரசு பள்ளியில் படித்தவர் இருக்கும் பொழுது மற்றவர்கள் சொல்லும் கருத்துக்கு இடமில்லை
மாநில பாடத்திட்டம் குறித்து பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள், அதை நாங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருந்தால் அரசியல் ஆகிவிடுகிறது. உங்களைப் போன்ற கல்வியாளர்களும், தனியார் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் இது குறித்து பேச வேண்டும்.
என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,நம் மாநில பாடத்திட்டம் பற்றி குறை சொல்பவர்கள் நம் ஆசிரியர்களையும், மாணவர்களையும் அவமானப்படுத்துவது போன்றது என்று இன்று நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட பேசினார். நாம் நன்றாக படித்து நல்ல மதிப்பெண் பெற்றால் பெற்றோர்களும் ஆசிரியர்களும் பெருமையாக சொன்னால் போதும்.
யார் யாரோ நம்மை பார்த்து சொல்லும் கருத்துக்களை நாம் அளவுகோலாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. தலைமை நீதிபதி ஒருவர் கூட நான் 40 ஆவது தலைமை நீதிபதி நான் அரசுப் பள்ளியில் படித்தவன் என்ற பெருமை உள்ளது என்றார்.
இது போன்று கருத்துக்கள் பரவுவதும் வரவேற்க தக்கது தான். அதனால் தான் சமூக வலைதளங்களில் ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களும் எங்கு சிறப்பான பணியில் உள்ளார்கள் என்று பதிவிட்டு வருகிறார்கள்.
NCF பற்றி எவ்வளவு சிறந்தது என்று கல்வியாளர்களிடம் பேட்டி எடுங்கள், அவர்கள் அரசியல் இல்லாமல் பதில் சொல்வார்கள்.
நம் தமிழ்நாட்டை காக்க தமிழக முதலமைச்சர் இரும்பு கரம் கொண்டு செயல்பட்டு வருகிறார். அதையும் மீறி ஆளுநர் ஏதாவது கருத்து சொல்ல வேண்டும் என்று சொல்கிறார் என்று கூறியுள்ளார் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
What's Your Reaction?