கமலுக்கு இல்லாத துணிச்சல் விஜய்க்கு உள்ளது.. ஆனாலும் மன்னிக்க முடியாது - எச்சரிக்கும் பாஜக பிரமுகர்

கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழச்சி அளிக்கிறது என்றும் "கோட்" படத்தில் சுபாஷ் சந்திரபோஷ் குறித்து தவறாக சித்தரித்ததை மன்னிக்க முடியாது என்றும் தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் தெரிவித்துள்ளார்.

Sep 8, 2024 - 15:06
Sep 9, 2024 - 10:56
 0
கமலுக்கு இல்லாத துணிச்சல் விஜய்க்கு உள்ளது.. ஆனாலும் மன்னிக்க முடியாது - எச்சரிக்கும் பாஜக பிரமுகர்
கமலுக்கு இல்லாத துணிச்சல் விஜய்க்கு உள்ளது.. ஆனாலும் மன்னிக்க முடியாது - பாஜக பிரமுகர் எச்சரிக்கை

இந்திய விடுதலைக்கு வித்திட்ட தவப்புதல்வர், தமிழகத்தை, தமிழர்களின் வீரத்தை போற்றிய மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களை இழிவு படுத்த வேண்டாம் என்று தமிழக பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், "கோட்" திரைப்பட நாயகன் விஜய்க்கு திறந்த மடல் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில் குறிப்பிட்டுள்ள ஏ.என்.எஸ்.பிரசாத், “தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நீங்கள் இனிமேல் திரைப்படங்களில் நடிக்க மாட்டேன் என அறிவித்துள்ளீர்கள். அதனால் இப்போது வெளியாகியுள்ள 'தி கோட்' உங்களின் கடைசி படம் என்று நினைக்கிறேன். திரைத்துறையில் உச்சத்தில் இருக்கும் போதே, திரைத்துறையிலிருந்து முற்றிலும் விலகி அரசியலில் ஈடுபடுவதாக அறிவி்த்துள்ளீர்கள். கமல்ஹாசனுக்கு இல்லாத துணிச்சல், உறுதி உங்களுக்கு இருப்பது மகிழச்சி அளிக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கியிருக்கும் The Greatest of All Time அதாவது 'தி கோட்' படம் பார்த்தேன். நீங்கள் மட்டுமல்லாது பிரசாந்த், பிரபுதேவா, மோகன், சினேகா என திரைத்துறையில் சாதித்த பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் ஒரு காட்சி என் மனதை மிகவும் காயப்படுத்தியது தொடர்பாக, தங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். அதற்காகவே இந்த கடிதம்.

இப்படத்தில் செல்போன் திருடனாக நடித்துள்ள யோகிபாபுவிடம், செல்போனை பெற வேண்டும் என்பதற்காக நீங்கள் பேசும்போது நான் காந்தி என்று உங்கள் பெயரை கூறும்பொழுது, பதிலுக்கு யோகிபாபு நீ காந்தி என்றால் நான் சுபாஷ் சந்திரபோஸ் என்கிறார். இது இயல்பான கிண்டலாக இருக்கலாம். சுதந்திரம் என்ற லட்சியத்திற்காகவே மகாத்மா காந்தியும், நேதாஜி சுபாஷ் சந்திபோஸும் போராடினார்கள். ஆனால், இருவரின் பாதைகளும் வேறு வேறாக இருந்தன.

அதனால் மகாத்மா காந்தியையும், நேதாஜியையும் நேர் எதிரெதிரானவர் போல காட்டியிருக்கிரீர்கள். திருடன் கதாபாத்திரத்திற்கு கிண்டலுக்காக கூட நேதாஜி பெயரை பயன்படுத்தியிருக்கக் கூடாது. இந்தியர்கள் மட்டுமல்ல உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் வருத்தப்படக்கூடிய காட்சி அமைப்பை உருவாக்கி, மன்னிக்க முடியாத தவறை தெரிந்தோ, தெரியாமலோ செய்து விட்டீர்கள்.

ஏனெனில் எவ்வித தொலைத்தொடர்பும், நவீன வசதிகளும் இல்லாத காலத்திலேயே கோடிக்கணக்கான இளைஞர்களிடம் சுதந்திரத் தீயை மூட்டியவர் நேதாஜி. அவரை தங்கள் கதாநாயகனாக, லட்சியத் தலைவராக போற்றி வணங்கி வாழ்பவர்கள் கோடிக்கணக்கில் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். நேதாஜி இல்லாமல் இருந்திருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைக்க இன்னும் தாமதமாகியிருக்கலாம். அவரின் பெயரைக் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சி அமைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

தி கோட் படத்தில் சுபாஷ் சந்திரபோஸ் பெயர் எதிர்மறையாக பயன்படுத்தப்படாமல் நீங்களும் பட குழுவும் தவிர்த்திருக்கலாம். நீங்கள் நினைத்தால் இப்போது கூட அதை மாற்ற முடியும். அரசியல் களத்திற்கு வந்திருக்கும் நீங்கள் நேதாஜியின் முக்கியத்துவத்தை உணர்ந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை நீங்கள் மாவீரர் சுபாஷ் சந்திரபோஸ் அவருடைய வரலாற்றை தெரிந்து இருக்க வில்லை என்றால், தமிழுக்கும் தமிழருக்கும் தமிழகத்திற்கும் மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் அவர்களுக்கும் உள்ள உள்ள அற்புதமான உறவை, விடுதலை உணர்வை புரிந்திருக்கவில்லை என்றால், சில அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இவர் தனது தலைமையில் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி ஜெர்மனியின் ஹிட்லர், ஜப்பான் நாட்டு உதவியுடன், சிங்கப்பூர் மலேசியா பர்மா உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் வாழ்ந்த இந்தியர்கள் துணையுடன் உலகெங்கும் உள்ள பாரத மக்களின் ஆதரவுடன், ஆங்கிலேயருக்கு எதிரான அனைத்து நாடுகளின் ஆதரவை ஒருங்கிணைத்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவத்தை பலமாக கட்டமைத்தார்.

இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியவர்களுள் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முதன்மையானவர். ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர முக்கிய காரணமாக விளங்கினார் என்றால் அது மிகையாகாது. நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. 

இந்திய வீரர்களை வைத்து, ஆங்கிலேய ராணுவத்தை எதிர்த்து போரிட்ட நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ், 1946ல் இந்திய பெருங்கடலையே முடக்கி, ஆங்கிலேயர்களின் கப்பற்படையை தோற்கடித்த வீர வரலாறு, உலக சுதந்திரப் போராட்டங்களின் மிக முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.

இந்திய சுதந்திரத்தின் வீர வரலாற்றில் ஒரு முக்கிய அங்கமாக தமிழகத்தில் வேலூர் சிப்பாய் கலகம் 1806இல் வெடித்தது. அதன் தொடர்ச்சியாக 1857இல் சிப்பாய் கலகம் மூலம் வட இந்தியாவில் உருவான கிளர்ச்சி முதல் சுதந்திரப் போர் என்று பேசப்பட்டது. பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான இந்தக் கிளர்ச்சி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையைக் உருவாக்கியது.

சிப்பாய் கலகத்திற்கு அடுத்து ஆங்கிலேய ஆட்சியாளர்களை நிலைகுலைய வைக்கும் வகையில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களை திரட்டி இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து ஆங்கிலேய ஆட்சிக்கு முடிவுரை எழுதியது மாவீரர் சுபாஷ் சந்திர போஸ் என்பதை யாரும் மறைக்க முடியாது. மறக்க முடியாது. மறக்க முடியாது. 

இந்திய சுதந்திர வரலாற்றில், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் வீர வரலாறு இருட்டடிப்பு செய்யப்பட்டாலும், படிப்படியாக அவருடைய தியாகத்தீயின் கீற்றுகள் தானாக வெளிப்பட்டு இன்றைக்கு இந்தியர்கள் அனைவரும் மனதிலும் அவருடைய வீரமும் பெருமையும் போற்றி வணங்கப்படுகிறது. அவர் கொண்டாடப்பட வேண்டும் என்று பேசி வருகின்ற வேளையில் இதற்கு நேர் மாறாக அவருடைய பெருமையை சிறுமைப்படுத்தும் விதமாக "கோட்" திரைப்படத்தில் ஒரு செல்போன் திருடனுக்கு அவருடைய பெயரைச் சூட்டியது மிகப்பெரிய தவறு.

மேலும் அந்த காட்சிகளில் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு என்று நகைச்சுவைக்காக பாத்திரங்களின் பெயரை பயன்படுத்தி இருப்பது சுதந்திர போராட்ட வீரர்களை, நாட்டின் தலைவர்களை அவமானப்படுத்தும் செயல். இதற்குக் காரணமான கோட் திரைப்படத்தின் தயாரிப்பாளர்கள், இயக்குனர் குழு, நடிகர்கள் தின அனைவருமே வெட்கி தலைகுனிய வேண்டிய விஷயம் என்பதை "கோட்" திரைப்பட குழு அனைவரும் உணர வேண்டும்.

நேதாஜி சுபாஷ் சந்திர நேதாஜி சுபாஷ் அவரின் தலைமை ஏற்று செயல்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தமிழக மக்களுக்கும் உள்ள இதயபூர்வமான உறவை, வீரத்தின் பெருமையை  நம்முடைய சந்ததியினருக்கு நாம் கற்றுத்தர வேண்டிய ஆவணப்படுத்தப்பட வேண்டிய காலகட்டத்தில், திரைப்பட காமெடி என்கிற மிகக் குறுகிய வட்டத்தில் அவரின் புகழை கெடுப்பது போன்ற காட்சிகளை நடிகர் விஜய் அவர்களின் "கோட்" படத்தில் உருவாக்கப்பட்டது மன்னிக்க முடியாத தவறு என்பதை நடிகர் விஜய் அவர்களும் படக் குழுவினரும் இயக்குனரும் படத் தயாரிப்பாளரும் உணர வேண்டும்.

*அந்தக் காட்சியின் பெயர்களை தாங்களே முன்வந்து மாற்றி அமைத்து முன்மாதிரியான தலைமை பண்பு கொண்டு தலைவராக விஜய் அவர்கள் இதற்கான முன்னெடுப்பை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் செய்த மாபெரும் தவறுக்கு நீங்கள் மன்னிப்பு கேட்டுக் கொள்ள வேண்டும். படக்குழு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நான் உங்களிடம் கேட்கப் போவதில்லை விஜய் அவர்களே! நடந்த தவறை உடனடியாக திருத்துங்கள். நீங்களும் திருத்திக் கொள்ளுங்கள் என்று மட்டும் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow