அரசியல்

கரூர் நெரிசல் பாதிக்கப்பட்டோருக்கு அரசு பணி... சட்டச் சிக்கலில் சிக்குமா விஜய் அரசு?

கரூர் நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு அரசு பணி வழங்கிய முதல்வர் விஜய்யின் முடிவுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்துள்ள நிலையில், விவகாரம் சட்டரீதியாகவும் கவனம் பெற்றுள்ளது.

கரூர் நெரிசல் பாதிக்கப்பட்டோருக்கு அரசு பணி... சட்டச் சிக்கலில் சிக்குமா விஜய் அரசு?
CM Vijay
கரூரில் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த 31 நபர்களுக்கு கடந்த ஜூலை 10ம் தேதி முதல்வர் விஜய் கரூரில் அரசு பணி ஆணை வழங்கினார். இதை வரவேற்றும், எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

பாதிக்கப்பட்ட பல குடும்பங்களில் தகுதி வாய்ந்தவர்கள் இல்லாத நிலையில் பணி ஆணை வழங்கவில்லை. கரூர் காவல்துறையில் பணிபுரியும் தேவேந்திரனின் மனைவி இறந்த நிலையில், தேவேந்திரன் காவலர் பணியில் இருப்பதாலும், அவரின் மகனுக்கு எட்டு வயது மட்டுமே நிரம்பியிருப்பதாலும் அவரின் குடும்பத்தில் யாருக்கும் வேலை தரவில்லை. அதேபோல, ஏமூரை சேர்ந்த அருக்காணி நெரிசலில் சிக்கி இறந்தார். அவரது மூன்று மகன்களும் தங்களுக்கு வேலை வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.

'மூன்று பேரில் ஒருவருக்குத்தான் வேலை. அது யார் என்று நீங்களே முடிவு செய்துவிட்டு வாருங்கள்' என அதிகாரிகள் சொல்லியும், அவர்களுக்குள் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அவர்கள் குடும்பத்தில் யாருக்கும் வேலை வழங்கவில்லை. சில குடும்பங்களில் 'எங்களுக்கு அரசு வேலை வேண்டாம்' என சொல்லிவிட்டனர். இதனால் 31 நபர்களுக்கு மட்டுமே அரசு வேலைக்கான ஆணை வழங்கப்பட்டது.

பணி ஆணை வாங்கிய சனப்பிரட்டியைச் சேர்ந்த கலைச்செல்வியிடம் பேசினோம். "நெரிசல் சம்பவத்தில் எனது கணவர் வடிவழகன் இறந்துவிட்டார். கணவனை இழந்து மிகவும் மன உளைச்சலில் இருந்த எனக்கு நிவாரண தொகை தந்ததோடு, என் வாழ்வில் விளக்கேற்ற தமிழக முதல்வர் அரசு வேலையும் வழங்கியுள்ளார். மாவட்ட வருவாய் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணி ஆணை கிடைத்துள்ளது" என்றார். அரவக்குறிச்சியை சேர்ந்த சுதன், "என் மனைவி பிருந்தா நெரிசலில் சிக்கி இறந்தார். நிவாரண உதவியோடு சேர்ந்து எனக்கு அரசு பணியும் முதல்வர் வழங்கினார்.

அரவக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக சேர்ந்துள்ளேன்" என்றார். இப்படி 31 நபர்கள் கரூரை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு பணியில் அமர்ந்துள்ளனர்.
இதுகுறித்து மூத்த வழக்கறிஞர் நன்மாறனிடம் பேசினோம். அரசு வேலை என்பது சீனியாரிட்டிபடி கொடுக்க வேண்டும். படித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு, பல ஆண்டுகளாக காத்திருந்து வேலை கிடைக்காமல் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர்.

இப்படிப்பட்ட நிலையில் விஜய்யின் கூட்டத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பது ஜனநாயக முறைக்கு ஏற்புடையதில்லை. இவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமானால் தனது சொந்த நிறுவனங்களில் விஜய் வேலைவாய்ப்பை உருவாக்கி தந்திருக்க வேண்டும். அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் தங்களது அலுவலகங்களில் வேலை போட்டுக் கொடுத்திருந்தால் விமர்சனமே எழுந்திருக்காது.

வேலைக்கான ஆணையை முதல்வர் வழங்கப்போகிறார், இதில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடாது என்றுதான் உயர் நீதிமன்றம், 'தற்காலிக வேலை ஆணை தான் வழங்க வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறது. உயர் நீதிமன்ற தீர்ப்பில் அரசுக்கு சாதகமாக உத்தரவு வந்தால், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். இதேபோல் உமா பாரதி தனது கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பணி வழங்கியதை 2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. இந்தப் பணி நியமன ஆணையின் முடிவும் இப்படித்தான் இருக்கும்" என்றார்.

முதல்வர் என்ன செய்யப்போகிறார்?