'தமிழ் நடிகைகளை யார் தடுக்கிறார்கள்?' - பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு கருத்து

நடிகர் சங்கத்தில் எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை என்றும் அவர்களை யார் தடுக்கிறார்கள் என்றும் நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.

Sep 4, 2024 - 19:31
Sep 4, 2024 - 19:36
 0
'தமிழ் நடிகைகளை யார் தடுக்கிறார்கள்?' - பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு கருத்து
பாலியல் புகார்கள் குறித்து குஷ்பு கேள்வி

சென்னையில் பெண் சக்தி இயக்கம் நடத்தும் 'மகளிர் தர்பார் - பெண்ணால் முடியும் வாருங்கள்’ என்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஆளுநரும் பாஜக தலைவர்களில் ஒருவருமான தமிழிசை சௌந்தரராஜன், தேசிய மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான குஷ்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “எனக்கு பாலியல் தொடர்பான, சம்பவங்கள் எதுவும் நடந்ததில்லை. நான் நான்கு தென்னிந்திய மொழிகளில் நடித்திருக்கிறேன். பெண்களுக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல்கள் எல்லா துறைகளிலும் தான் ஏற்படுகிறது. அனைத்து துறைகளிலும் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும்.

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால்கள் என சினிமா துறையை மட்டும் பிடித்து கொள்கிறார்கள். அது ஏன்? சினிமாவில் மட்டும் ஏன் ஹேமா கமிட்டி இருக்க வேண்டும். பெண்கள் பணியாற்றக்கூடிய ஒவ்வொரு துறைகளிலும் ஹேமா கமிட்டி போல் இருக்க வேண்டும்.

தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்பு கமிட்டி போன்ற அமைப்புகள் தமிழகத்தில் ஏற்கனவே செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது. தமிழ் நடிகர் சங்கத்தில், எந்த தமிழ் நடிகையும் தற்பொழுது வரை புகார் தெரிவிக்கவில்லை. உங்களை யார் தடுக்கிறார்கள்?.

ஒரு நடிகை வந்து ஒருவர் மீது பாலியல் புகார் தெரிவிக்கும்போது யாராக இருந்தாலும் முதலில் எச்சரிக்கை விடப்படும். அதன் பிறகு விசாரணை கமிட்டி அமைத்து தொடர்ந்து பேசப்படும். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் மொத்தமாக ஏழு தீர்மானங்கள் உள்ளது. எங்களிடம் வந்து பேசுங்கள்.

உங்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான், நாங்கள் உள்ளோம். உங்களுக்கு தீர்வு காணவே நாங்கள் உள்ளோம். இதற்காக தான் விஷாகா கமிட்டி மற்றும் நடிகர் சங்கம் உள்ளது. இல்லை என்றால் மாநில மகளிர் ஆணையத்திடம் சென்று புகார் அளிக்கலாம். உங்களை புகார் தெரிவிக்காமல் எது தடுக்கிறது?” என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow