Isha Cauvery Kookural : சமவெளியிலும் செழித்து வளரும் ஜாதிக்காய்.. எப்படி தெரியுமா?.. 'ஈஷா காவேரி கூக்குரல்' கருத்தரங்கு வாருங்கள்!

Isha Cauvery Kookural : ''ஜாதி பத்ரியை நன்றாக உலர்த்தி எடுத்தால் எத்தனை ஆண்டுகளானாலும் வைத்துக் கொள்ள முடியும். இது ஒரு கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை ஆகிறது. இது தவிர ஜாதிக்காயின் கொட்டை கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையில் விற்பனை ஆகிறது. மொத்தத்தில் ஒரு ஜாதிக்காய் ரூ.5 வரை விற்பனை ஆகிறது'' என்று விவசாயி தக்‌ஷிணா மூர்த்தி கூறியுள்ளார்.

Aug 30, 2024 - 16:47
Aug 30, 2024 - 18:19
 0
Isha Cauvery Kookural : சமவெளியிலும் செழித்து வளரும் ஜாதிக்காய்.. எப்படி தெரியுமா?.. 'ஈஷா காவேரி கூக்குரல்' கருத்தரங்கு வாருங்கள்!
Dakshina Krishnamoorthy

Isha Cauvery Kookural : விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும் பயிர்களில் மரவாசனைப் பயிர்கள் முக்கியமானவை. ஆனால் மர வாசனைப் பயிர்கள் சமவெளியில் வளருமா? என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. இதனால் அந்தப் பயிரை தேர்வு செய்வதில் விவசாயிகள் பலர் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் உண்மை நிலை வேறு விதமாக உள்ளது. 

அதாவது மிளகு, ஜாதிக்காய், இலவங்கப் பட்டை போன்ற வாசனை பயிர்கள் சமவெளியிலும் விளைவது சாத்தியம் தான் எனக்கூறி பல விவசாயிகள் வெற்றிகரமாக தங்கள் நிலத்தில் மர வாசனைப் பயிர்களை விளைவித்து நிரூபித்துள்ளனர். 

அந்த வகையில் சமவெளியில் ஜாதிக்காய் விளைவித்து வெற்றிகரமாக வருவாய் ஈட்டி வருகிறார் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த தக்‌ஷிணா மூர்த்தி. கோபி செட்டிபாளையம் அந்தியூர் பகுதியில் 5 ஏக்கரில் விரிந்திருக்கிறது இவரின் இயற்கை பண்ணை. பாக்கு மரங்களின் நடுவே ஜாதிக்காயை ஊடுபயிராக செய்து வருகிறார்.

ஜாதிக்காயை எப்படி துணிந்து தேர்வு செய்தீர்கள்? அதனால் ஏற்பட்டுள்ள நன்மைகள் குறித்து கூறுங்கள்? என கேட்டபோது, உறுதியான குரலில் பேசத் தொடங்கினார் தக்‌ஷிணா மூர்த்தி. 

''என் பண்ணையில் பாக்கு தான் பிரதான பயிர். பாக்கு மரம் 30 – 40 ஆண்டுகள் வரை இருக்கும் நீண்ட கால பயிர். அதை போலவே ஜாதிக்காயும் 100 ஆண்டுகள் வரை இருக்கக்கூடிய உறுதியான மரம். மேலும் இந்த மரத்திற்கான பராமரிப்பு குறைவு. ஆனால் வருவாய் அதிகம் என்பதால் இந்த பயிரை ஊடுபயிராக தேர்வு செய்தேன்.

எங்கள் தோட்டத்தில் 200 ஜாதிக்காய் மரங்கள் இப்போது இருக்கின்றன. இவை காப்புக்கு வர 4 வருடங்கள் வரை ஆகும். ஜாதிக்காய் 15 அடி வளரும் வரை அதை ஒரு குழந்தை போல் பராமரித்தால் போதுமானது. உதாரணமாக 800 பாக்கு மரங்களுக்கு பயன்படுத்தும் தண்ணீர், 200 ஜாதிக்காய் மரங்களுக்கும் போதுமானதாக இருக்கிறது. மேலும் ஆண்டுகள் கூடக் கூட நமக்கு காய்ப்பு அதிகம் கிடைக்கும். மேலும் இதோடு மிளகும் வளர்த்து வருகிறேன். 

அது மட்டுமின்றி ஜாதிக்காய் பயிருக்கு பெருமளவு நோய் தாக்குதல் ஏற்படுவதில்லை.  வெகு அரிதாக வேர் கரையான் மூலம் ஒரு சில மரங்கள் பாதிக்கப்பட்டன. வேப்பம் புண்ணாக்கை வருடத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால் அதுவும் கூட வருவதில்லை. மேலும் ஜாதிக்காயின் கொட்டை, தோல், பத்ரி என அனைத்து பாகங்களுக்கும் தற்போது தேவை இருக்கிறது. ஜாதிக்காயிலிருந்து ஊறுகாய் போன்ற மதிப்புகூட்டல் பொருட்கள் செய்ய முடியும். 

அத்துடன் ஜாதி பத்ரியை நன்றாக உலர்த்தி எடுத்தால் எத்தனை ஆண்டுகளானாலும் வைத்துக் கொள்ள முடியும். இது ஒரு கிலோ ரூ.1,500 முதல் ரூ.2,000 வரை விற்பனை ஆகிறது. இது தவிர ஜாதிக்காயின் கொட்டை கிலோ ரூ.300 முதல் ரூ.400 வரையில் விற்பனை ஆகிறது. மொத்தத்தில் ஒரு ஜாதிக்காய் ரூ.5 வரை விற்பனை ஆகிறது. 

ஜாதிக்காய் மரம் வைத்த பத்தாண்டுகளுக்கு பின் ஒரு மரத்தில் இருந்து 500 காய்கள் முதல் 1,000 காய்கள் வரை மகசூல் எடுக்க முடியும். ஜாதிக்காய் தரும் வருவாயை பார்த்த பின்பாக எனக்கிருக்கும் மற்றொரு 3 ஏக்கர் நிலத்தில் மீண்டும் 200 ஜாதிக்காய் செடிகளை வைத்துள்ளேன். மொத்தத்தில் ஒரு அடுக்கு முறையில் விவசாயம் செய்யாமல் பல அடுக்கு முறையில் விவசாயம் செய்கிறபோது, குறைவான சூரிய ஒளியின் மூலம் வாசனைப் பயிர்களை நல்ல முறையில் வளக்க முடிகிறது. 

குறைந்தது 21 அடிக்கு மேலான இடைவெளியில் அவைகளை நட்டு வளர்த்தால் நிச்சயமாக நல்ல வருவாய் ஈட்டலாம். பல அடுக்கு முறையில் விவசாயம் செய்வதன் மூலம் 3 மடங்கு அதிக லாபம் கிடைப்பதோடு மண் வளம், சுற்றுச்சுழல் மேம்படுதல், குளுமையான சூழல், மண் புழு அதிகரித்தல் உள்ளிட்ட ஏராளமான நன்மைகளை பெற முடிகிறது. எனவே சமவெளியில் மரப்பயிர்களை துணிந்து நடுங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும். இதற்கு என் நிலமே சாட்சி'' என்று வெற்றி பெருமிதத்துடன் பேசி முடித்தார் தக்‌ஷிணா மூர்த்தி. 

இவரைப் போல இன்னும் பல வெற்றி விவசாயிகள் தங்களின் அனுபவங்களை 'ஈஷா காவேரி கூக்குரல்' சார்பில் வரும் செப்டம்பர் 1ம் தேதி திருப்பூர் தாராபுரத்தில் நடைபெறும் 'சமவெளியில் மர வாசனைப் பயிர்கள் சாத்தியமே' எனும் மாபெரும் கருத்தரங்கில் பகிர உள்ளனர்.

இந்த கருத்தரங்கில் பல முன்னோடி வெற்றி விவசாயிகள், வேளாண் வல்லுனர்கள் மற்றும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள் என பல அறிஞர்கள் கலந்து கொண்டு பயனுள்ள பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொள்ள உள்ளனர்.  இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள விரும்புவோர் 94425 90079 மற்றும் 94425 90081 என்ற செல்போன் எண்களை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow