அட கொடுமையே! 'ஏன் திருமணம் செய்யவில்லை' என்று நச்சரித்த உறவினர் அடித்துக் கொலை!

திருமணம் செய்யாமல் இருக்கும் 90 கிட்ஸ்களிடம், ''நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? எப்போது திருமணம் செய்வீர்கள்?'' என்று தொடர்ந்து கேள்வி கேட்பதை ஒருசிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக 90 கிட்ஸ்களின் உறவினர்கள் தினமும் மேற்கண்ட கேள்வியை கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது.

Aug 7, 2024 - 11:00
 0
அட கொடுமையே! 'ஏன் திருமணம் செய்யவில்லை' என்று நச்சரித்த உறவினர் அடித்துக் கொலை!
Indonesia Man Beaten To Death

ஜகார்த்தா: இன்றைய காலக்கட்டத்தில் இளைய தலைமுறையினர் திருமண வயது வந்த உடனேயே திருமணம் செய்து விடுகின்றனர். குறிப்பாக  2k கிட்ஸ்கள் முதல் ஆண்டு காதல், அதற்கு அடுத்த ஆண்டு திருமணம் என வாழ்க்கையில் மிக வேகமாக செட்டில் ஆகி விடுகின்றனர். ஆனால் இப்போது மிகவும் தாமதமாக திருமணம் செய்யும் பிரிவினரும் உள்ளனர்.

அவர்கள்தான் 90 கிட்ஸ்கள். 1985-90களில் பிறந்த 90 கிட்ஸ்களின் வாழ்க்கை மிகவும் போராட்டம் நிறைந்தது. வேலை கிடைக்க தாமதம், அப்படியே வேலை கிடைத்தாலும் வீட்டுக்கு பணம் அனுப்ப வேண்டிய சூழ்நிலை, பின்தங்கிய குடும்ப பொருளாதாரம் ஆகியவை காரணமாக 90 கிட்ஸ்கள் 32 வயதுக்கு மேல்தான் திருமணம் செய்ய முடிகிறது.

அதுவும் சில 90 கிட்ஸ்கள் இன்னும் திருமணம் செய்ய முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இப்படி பல்வேறு சூழ்நிலைகளில் திருமணம் செய்யாமல் இருக்கும் 90 கிட்ஸ்களிடம், ''நீங்கள் ஏன் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை? எப்போது திருமணம் செய்வீர்கள்?'' என்று தொடர்ந்து கேள்வி கேட்பதை ஒருசிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர். குறிப்பாக 90 கிட்ஸ்களின் உறவினர்கள் தினமும் மேற்கண்ட கேள்வியை கேட்கவில்லை என்றால் அவர்களுக்கு தூக்கமே வராது.

இந்த கேள்வியை எதிர்கொள்ளும் 90 கிட்ஸ்களில் ஒரு சிலர் இதை பொறுமையாக கடந்து செல்வார்கள். சிலர் அந்த கேள்வியை கேட்ட உறவினர்களை அவர்கள் போனபிறகு கடுமையாக வசைபாடுவார்கள். இன்னும் ஒரு சிலருக்கு, ''யாருய்யா இவன்.. நம்ம சூழ்நிலை தெரியாமல், இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல, இன்னும் ஏன் கல்யாணம் பண்ணல என்று உயிரை வாங்கிக் கொண்டிருக்கிறான். பேசாம இவனை போட்டுத் தள்ளிட வேண்டியதுதான்'' என்று மனதில் தோன்றும்.

இப்படி ஒரு சில 90 கிட்ஸ்களின் மனதில் தோன்றியதை உணமையிலேயே செய்து காட்டியுள்ளார் இந்தோனேசியாவை சேர்ந்த ஒருவர். ஆம்... ''ஏன் இன்னும் திருமணம் செய்யவில்லை'' என்று தொடர்ந்து கேட்டு வந்த உறவினரை கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக காண்போம்.  இந்தோனேசியா நாட்டின் நார்த் சுமத்ரா தெற்கு தபனுலி பகுதியை சேர்ந்தவர் பார்லிதுங்கன் சிரேகர். 45 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

இதற்கிடையே இவர் கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் தனது உறவினரான 60 வயதான அஸ்கிம் இரியன்டோ என்பவரை மரக்கட்டைகளால் தலை உள்பட உடலின் பல இடங்களில் கடுமையாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அஸ்கிம் இரியன்டோ, ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அஸ்கிம் இரியன்டோ பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பார்லிதுங்கன் சிரேகரை கைது செய்தனர். உறவினரான அஸ்கிம் இரியன்டோ, 'இன்னும் ஏன் திருமணம் செய்யவில்லை' என்று பார்லிதுங்கன் சிரேகரிடம் தொடர்ந்து கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த பார்லிதுங்கன் சிரேகர், அஸ்கிம் இரியன்டோவை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்தது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow