சிவகாசி பட்டாசு ஆலை வெடி விபத்து 2 பேர் மரணம் - பலர் படுகாயம்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி, சாத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான பட்டாசு ஆலைகள் உள்ளன. அங்கு தினசரியும் ஏதாவது ஒரு ஆலை வெடி விபத்து நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுவது வழக்கமாகி வருகிறது.
கடந்த மாதம் சிவகாசி அருகே செங்கமலப்பட்டியில் கீழதிருத்தங்கல்லை சேர்ந்த சரவணன் என்பவருக்கு சொந்தமான சுதர்சன் பட்டாசு ஆலையில் திடீரென பட்டாசு வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் சிக்கி 5 பெண்கள், 3 ஆண்கள் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர்
கடந்த 29ஆம் தேதியன்று சாத்தூர் அருகே உள்ள பந்துவார்பட்டியல் சகாதேவன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் பட்டாசு தயாரிப்பதற்கான மூலப் பொருட்களை கலவை செய்தபோது உராய்வு ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில் மூன்று அறைகள் இடிந்து சேதமடைந்தன. அந்த அறைகளில் பணியாற்றிக் கொண்டிருந்த பட்டாசு தொழிலாளர்கள் 4 பேர் சிக்கி உயிரிழந்தனர்.
அந்த சோகம் மறைவதற்குள் இன்று ம.புதுப்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து நிகழ்ந்துள்ளது.சிவகாசி ம.புதுப்பட்டி அருகே காளையார்குறிச்சியில் சுப்ரீம் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் 2 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் விபத்தில் உயிரிழந்தவர்கள் மாரியப்பன் மற்றும் முருகன் என்பது தெரியவந்துள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 2 பெண்கள் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
What's Your Reaction?