ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு.. சிக்கலில் மாஜி அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.. 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு
ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை மிரட்டி போலியான ஆவணம் கொடுத்து சொத்தை அபகரித்ததாக எழுந்த புகாரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வாங்கல் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் கரூர் எம்.எல்.ஏவாக வெற்றிப் பெற்ற எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜெயலலிதா அமைச்சரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவியேற்றார். செந்தில் பாலாஜி மீது இருந்த கோபத்தில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கரூரை சேர்ந்த எம்ஆர் விஜயபாஸ்கருக்கு அமைச்சர் பதவியை கொடுத்து அழகுபார்த்தார்.. 2016-2021 வரை அந்த துறைக்கு அமைச்சராக இருந்த எம்.ஆர் விஜயபாஸ்கர் மீது சொத்துக் குவிப்பு வழக்கு, ஜி.பி.எஸ் கருவி கொள்முதல் ஊழல் புகார் உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில்தான் 100 கோடி ரூபாய் நிலத்தை மோசடி செய்து அபகரித்து விட்டதாக எம்ஆர் விஜயபாஸ்கர் மீது புகார் எழுந்துள்ளது. தனது 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துவிட்டார் என்று கரூரைச் சேர்ந்த பிரகாஷ் என்று தொழிலதிபர் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்து இருந்தார். இதையடுத்து, கரூர்- மேலக்கரூர் சார் பதிவாளர் முகமது அப்துல் காதரும், கரூர் டவுன் காவல் நிலையத்தில் நில அபகரிப்பு குறித்து ஒரு புகாரளித்து இருந்தார்.
இந்த வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயர் சேர்க்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது அவரது பெயரை சேர்த்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து நில அபகரிப்பு விவகாரத்தில் நில உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்து நில அபகரிப்பு, கொலை மிரட்டல், போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் கரூர் வாங்கல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவரை தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.மும்பை, கேரளாவில் விஜயபாஸ்கர் பதுங்கி இருக்கலாம் என தேடி வருகின்றனர். இந்த நிலையில் வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீஸார் லுக்-அவுட் நோட்டீஸ் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
What's Your Reaction?