ஃபார்முலா 4 கார் பந்தயம்.. 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் - ஸ்தம்பிக்கும் சென்னை

ஆகஸ்ட் 30,31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.7 கிலோ மீட்டர் தூரத்துக்கு ஃபார்முலா 4 கார் பந்தயம் நடைபெற உள்ளதை முன்னிட்டு 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Aug 29, 2024 - 16:55
 0
ஃபார்முலா 4 கார் பந்தயம்.. 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் - ஸ்தம்பிக்கும் சென்னை
formula 4 car racing festival 2024

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) இந்தியாவின் முதல் ஆன்-ஸ்ட்ரீட் நைட் ஃபார்முலா 4 பந்தய நிகழ்வான "சென்னை ஃபார்முலா ரேசிங் சர்க்யூட்" 30.08.2024 முதல் 01.09.2024 வரை சென்னை தீவு திடல் மைதானத்தைச் சுற்றி நடைபெறுகிறது.இந்த நிகழ்ச்சி 30.08.2024 முதல் 01.09.2024 வரை மதியம் 12.00 மணி முதல் 2200 மணி வரை நடைபெற இருப்பதால் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் முதன்முறையாக இரவு நேர ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னையில் ஆகஸ்ட் 30இல் தொடங்கி செப்டம்பர் 1 வரை நடைபெற இருக்கிறது. இதற்காக தீவுத்திடலை சுற்றி 3.5 கிலோ மீட்டர்கள் தூரத்திற்கு சாலைகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. கார் பந்தயம் நடைபெறும் கொடிமரச்சாலையில் இந்திய ராணுவத்தின் அலுவலகம் இருப்பதால், ராணுவத்திடமிருந்து தடையில்லா சான்று பெறப்பட்டும் கார் பந்தயம் நடைபெற தயாராக இருக்கிறது.

ஃபார்முலா 4 கார்பந்தயமானது, தீவு திடலில் இருந்து புறப்பட்டு கொடிமர சாலை, அண்ணா சாலை, சுவாமி சிவானந்த சாலை வழியாக நேப்பியர் மேம்பாலம் வந்து மீண்டும் தீவுத்திடலை அடைவதை ஒரு சுற்றாக கணக்கிடப்படுகிறது.இந்த கார் பந்தயமானது தீவுத்திடலில் தொடங்கி, கொடிமர சாலை வழியாக சென்று இடதுபுறம் திரும்பி, அண்ணா சாலையில் 1 கிலோ மீட்டர் தூரம் சென்று பின்னர் அண்ணா சாலையிலிருந்து சுவாமி சிவானந்தா சாலைக்கு வலதுபுறம் திரும்பி 1 கிலோ மீட்டர் தூரம் சென்று நேப்பியர் பாலம் அடைந்து மீண்டும் தீவு திடலை சென்றடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கார் பந்தயத்திற்காக மூன்று 3.5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஏற்கனவே போடப்பட்டிருந்த சாலைகள் அகற்றப்பட்டு கார் பந்தயத்திற்கு ஏற்றவாறு சாலைகள் புதிதாக அமைக்கப்பட்டது. குறிப்பாக கார்பந்தத்திற்காகவே, கார் பந்தயம் நடத்தும் நிறுவனம் 200 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளதாகவும் தகவல் வெளிவர தொடங்கியுள்ளது.

இந்த கார் பந்தயத்தை சாலையின் இரண்டு பக்கங்களிலும் பொதுமக்கள் அமர்ந்து பார்க்கும் வகையில் நாற்காலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. பந்தயத்தை பார்க்கும் பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு எந்தவித ஆபத்து ஏற்படாத வகையில் பாதுகாப்புகளும் செய்யப்பட்டிருக்கிறது.

சாலையில் இருந்து நான்கு அடி உயரத்திற்கு கான்கிரீட் தடுப்பு சுவர்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. பின்னர் கான்கிரீட் சுவரிலிருந்து 15 அடி உயரத்திற்கு உறுதியான இரும்பு வேலிகள் போடப்பட்டிருக்கிறது. பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டாலும், பொதுமக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது.

போட்டிகள் அனைத்தும் இரவு நேரத்தில் நடைபெற இருப்பதால் நூற்றுக்கு மேற்பட்ட உயர் மின் கம்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு கம்பத்திற்கு ஆறு விளக்குகள் மின்கம்பத்தில் பொருத்தப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாலையின் இரு பக்கத்திலும் அமைக்கப்பட்டு வருகிறது.

இதில் ஒரு மின்விளக்குகளில் 960 வாட் திறன் கொண்ட மின் விளக்கு பயன்படுத்தப்படுவதால், ஆயிரக்கணக்கான மின்விளக்குகள் இரவை பகலை போலவே பிராகாசிக்கும். கார் பந்தையத்தை பார்ப்பதற்கு டிக்கெட்டுகளின் விவரங்களும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 இதில் 1699 ரூபாய் முதல் 10999 ரூபாய் வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த டிக்கெட் விற்பனையானது insider.in என்ற இணையதளத்தின் மூலமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கார் பந்தயம் ஆகஸ்ட் 30 ,31 செப்டம்பர் 1ஆம் தேதி நடைபெற இருப்பதால் இன்னும் இரண்டு நாட்களில் இருக்கக்கூடிய நிலையில் ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையொட்டி 3 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


தெற்கிலிருந்து வாகனங்கள்

a) காமராஜர்சாலையில் போர் நினைவிடம் நோக்கி செல்லும் வாகனங்கள் உழைப்பாளர் சிலை அருகே திருப்பி விடப்பட்டு வாலாஜா சாலை, அண்ணாசாலை, பெரியார் சிலை. சென்ட்ரல் லைட் பாயின்ட் (மத்திய ரயில் நிலையம்), ஈவிஆர் சாலை வழியாக சென்றடையலாம்.

b) மவுண்ட் ரோட்டில் வாலாஜா பாயிண்ட் நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலையில் சென்ட்ரல் லைட் பாயின்ட் நோக்கி திருப்பி விடப்படும்.

c) சிவானந்தசாலை மற்றும் கொடி மரச் சாலை முற்றிலும் மூடப்படும்.

வடக்கு பகுதியிலிருந்து வரும் வாகனங்கள்

a) காமராஜர் சாலையிலிருந்து சாந்தோம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு எந்த வித போக்குவரத்து மாற்றமும் இல்லை.

b) சென்ட்ரல் லைட்டில் இருந்து அண்ணா சிலை நோக்கி செல்லும் வாகனங்கள் பல்லவன் சாலை சந்திப்பு வரை வழக்கம் போல் செல்லலாம். பல்லவன்சாலை சந்திப்பில் இருந்து பெரியார் சிலை வரை ஒரு வழிப்பாதையானது தற்காலிக இருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.

b) முத்துசாமி சந்திப்பிலிருந்து அண்ணாசாலை மற்றும் கொடி மரச்சாலைகளுக்கு வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. அதற்குப் பதிலாக, பல்லவன் சாலை.
ஈவிஆர் சாலை, சென்ட்ரல் இரயில்வே நிலையம். பெரியமேடு காந்தி இர்வின் வழியாக சென்று தங்கள் சேர வேண்டிய இலக்கை அடையலாம்

கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் இலகுரக சரக்கு வாகனங்கள்:

தீவு திடலை சுற்றியுள்ள பிரதான சாலைகள், வாலாஜா சாலை,அண்ணாசாலை, காமராஜர்சாலை, ஈ.வி.ஆர்.சாலை, ஆர்.ஏ.மன்றம். முத்துசாமி பாயின்ட், பாரிஸ் கார்னர் ஆகிய இடங்களில் கனரக வாகனங்கள் மற்றும் இலகுரக வணிக வாகனங்கள் செல்ல நண்பகல் 1200 மணி முதல் 2200 மணி வரை செல்ல தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளன.

பொதுவாகவே சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் பகுதிகளிலும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெறும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பெசன்ட் நகர் ஆலய திருவிழாவினால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கார் பந்தயத்தினால் முக்கியமான சாலை மூடப்பட உள்ளது. 2 நாட்களுக்கு போக்குவரத்து திருப்பி விடப்பட உள்ளதால் சென்னையின் தென் பகுதி ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow