சனாதனத்திற்கு எதிராக பேசுவதில்லை.. என்னவோ நடந்துள்ளது.. உதயநிதியை மறைமுகமாக சாடிய ஆளுநர்
தமிழ்நாட்டில் சனாதனத்திற்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்தனர். அதன் பிறகு என்ன நடந்ததோ திடீரென அமைதியாகி, பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், "ஸ்ரீராமரும் தமிழகமும் - இணை பிரியா பந்தம்" என்கிற நூலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டார். இதில் முன்னாள் தமிழ்நாடு அமைச்சர் ஹண்டே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெய் ஸ்ரீ ராம் என தனது உரையை ஆளுநர் ரவி தொடங்கினார். பின்னர் அவர் பேசுகையில், “ராமர் கோவில் கும்பாபிஷேகத்தின் போது, நாடே ராமரின் பக்தியில் மூழ்கி இருந்தது. அப்போது தமிழ்நாட்டில் ராமர் வடமாநில கடவுள், தமிழ்நாடு மக்களுக்கு தெரியாது என்ற கருத்தை கட்டமைத்தனர்.
சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்களால் இளைஞர்கள் நமது கலாச்சார, ஆன்மீக பாரம்பரியத்தை இழந்துள்ளனர். ஜோடிக்கப்படும் கருத்துக்களால் நமது கலாச்சாரம் இனப்படுகொலை செய்யப்படுகிறது.ராமர் எங்கும் உள்ளவர். அவரது தடங்கல் தமிழ்நாட்டில் உள்ளது. அனைவரது மனதிலும் ராமர் இருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த மாநிலத்தில் நடந்த மூன்று நிகழ்வுகளை நினைவுபடுத்த விரும்புகிறேன். பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான போது, சோழர்கள் தான் பொதுவாக பேசப்பட்டனர். அப்போது, சிவன் நமது கடவுள், இந்திய அளவிலான கடவுள் அல்ல. ஏனென்றால், சோழர்கள் சிவனை வழிபட்டுள்ளனர் என பேசப்பட்டது.
இரண்டாவதாக, படம் வெளியான கொஞ்ச நாளில் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெற்றது. அதிகளவிலான மக்கள் வரவேற்பின் காரணமாக அதிக மக்கள் கலந்துகொள்ள விண்ணப்பித்தனர். காசிக்கு தமிழிற்கும் உள்ள தொடர்பு குறித்து பேசப்பட்டது. மூன்றாவதாக, சனதானத்திற்கு எதிராக சிலர் பேச ஆரம்பித்தனர். சனாதனத்தை டெங்கு, மலேரியா என பேசினர். அதன் பிறகு என்னமோ நடந்தது. திடீரென அமைதியாகி விட்டனர். சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்திவிட்டனர்.
நாடு முழுவதும் பயணித்து மக்களுடன் சிறிது நேரம் ஒதுக்கினால் தெரியும், நாட்டின் ஒவ்வொரு அங்குலத்திலும் ராமர் இருக்கிறார். பழங்காலத்தில் ராமரை மக்களின் மனதில் இருந்து நீக்க முடியவில்லை. ஏனென்றால், அவர் கோவிலில் வாழவில்லை. மக்களின் மனதிலும் நினைவிலும் வாழ்ந்து வருகிறார். ராமரை நீக்க முடியாது. ஒருவேளை நீக்க முயற்சி செய்தால் பாரதம் இருக்காது. நாடும் இருக்காது. இந்த நாட்டை இணைக்கும் பசையாக ராமர் உள்ளார். மொழி, இனம் கடந்து ராமர் மக்கள் மனதில் உள்ளார்” என்றார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆளுநருக்கும், அதிகார மட்டத்திற்கும் இடையே, தொடர்ந்து பனிப்போர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் அமைத்தது முதல், ராமர் கோவில், சட்டமன்றத்தில் சலசலப்பு என தொடர்ந்து திமுகவிற்கும், ஆளுநருக்கும் இடையே சுமூகமான உறவு இருந்ததில்லை.
மேலும், இந்து சனாதனம் குறித்து தொடர்ந்து திமுக விமர்சித்து வந்தது. அதே, சமயம் ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்து சனாதனம் தான் உலகிலேயே சிறந்த கருத்து என்றும், அதுதான் இந்திய தேசத்திற்கு முதுகெலும்பாக உள்ளது என்றெல்லாம் கூறி வந்தார். இந்நிலையில், திமுக குறித்து மறைமுகமாக பேசிய ஆளுநர், என்ன நடந்ததோ, திடீரென அமைதியாகி விட்டனர். சனாதனத்திற்கு எதிராக பேசுவதை நிறுத்திவிட்டனர் என்று சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு ஆளுநருக்கும், அதிகார மட்டத்திற்கும் இடையே, தொடர்ந்து பனிப்போர் நடைபெற்று வருகிறது. நாடாளுமன்ற கட்டடத்தில் செங்கோல் அமைத்தது முதல், ராமர் கோவில், சட்டமன்றத்தில் சலசலப்பு என தொடர்ந்து திமுகவிற்கும், ஆளுநருக்கும் இடையே சுமூகமான உறவு இருந்ததில்லை.
இந்நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) சார்பில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்திய விடுதலைப் போரில் ஆர்.எஸ்.எஸ்.சின் பங்களிப்பு என்ற தலைப்பில் இருந்த கேலிச்சித்திரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டுப் பேசினார்.
அப்போது, "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அப்படித்தான் இந்தச் சனாதனம்” என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






