சனி பெயர்ச்சி பலன் 2025: சனியின் ஆட்டம் ஆரம்பம்.. 2025ல் யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றம்?

சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சனி பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? 2025ஆம் ஆண்டில் எந்த ஆலயத்திற்கு சென்று வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

Aug 21, 2024 - 15:46
Aug 21, 2024 - 16:00
 0
சனி பெயர்ச்சி பலன் 2025: சனியின் ஆட்டம் ஆரம்பம்.. 2025ல் யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றம்?
sani peyarchi palan 2024

சென்னை: நவ கிரகங்களில் சனி பகவான் இரண்டரை ஆண்டு காலம் ஒரு ராசியில் பயணம் செய்வார். கும்ப ராசியில் 2023ஆம் ஆண்டு முதல் பயணம் செய்யும் சனி பகவான் வரும் 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மீன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையபோகிறார். இந்த சனி பெயர்ச்சியால் மேஷம் விரைய சனி, ரிஷபம் லாப சனி, மிதுனம் தொழில் சனி, கடகம் பாக்ய சனி, சிம்மம் அஷ்டமத்துசனி, கன்னி  கண்டச் சனி, துலாம் ருண ரோக சத்ரு சனி, விருச்சிகம் பூர்வ புண்ணிய சனி, தனுசு அர்த்தாஷ்டம சனி, மகரம் முயற்சி சனி, கும்பம் பாத சனி, மீனம் ஜென்ம சனி என 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சனியினால் பலன்கள் நடைபெறும். 

ஏழரை சனி யாருக்கு:  கும்பம், மீனம், மேஷம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். ஏழரை ஆண்டு காலம் சனியால் சங்கடப்பட்ட மகர ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். இந்த சனிப்பெயர்ச்சி காலமான 30 மாதமும் பாதிப்புகள் குறைய  மேஷம், சிம்மம், தனசு  கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்ய வேண்டும். 

மேஷம்: 2025ஆம் ஆண்டு முதல் மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குகிறது. விரைய சனி காலம். லாப சனியில் சம்பாதித்ததை எல்லாம் சுப விரைய செலவுகளாக மாற்றுங்கள். ஏழரை சனி பிடிக்கிறதே என்று பயப்பட தேவையில்லை. சனி பகவான் உங்கள் ராசியில் நீச்சமடைபவர் மேஷ ராசிக்காரர்களுக்கு ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். தவறு செய்பவர்களுக்கு படிப்பினைகளை கொடுப்பார். ஏழரை சனி காலத்தில் தொழில் முதலீடுகளில் அதிக அளவில் பணத்தை இன்வெஸ்ட் செய்து அகலக்கால் வைக்க வேண்டாம் ஆபத்தாகி விடும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். 

ரிஷபம்:  2025 ஆண்டு முதல் ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் லாபத்தை அள்ளித்தரப்போகிறார். தொட்டதெல்லாம் இனி பொன்னாகும். சனியால்  பலன்களும் நன்மைகளும் அதிகரிக்க சிவ ஆலயம் சென்று நவகிரக சனிபகவானை எள் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. அதிக பணம் வந்தால் அதை விரைய செலவு செய்யாதீர்கள். அப்புறம் ஏழரை சனி காலத்தில் சிரமப்பட வேண்டியிருக்கும். அசையும் அசையா சொத்துக்கள் மூலம் அமோக லாபம் வரும். திருமணமாகி நீண்ட நாட்களாக குழந்தை பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் வரும். வெளிநாடு போகும் யோகம் வரும். வியாபாரம் தொழிலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 

மிதுனம்: பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்தில் சனி பகவான் பயணம் செய்யும் காலத்தில் வியாபாரம் தொழில் வளர்ச்சியடையும். பட்டம், பதவி, புகழ் தேடி வரும். சுய தொழில் தொடங்கலாம். வேலை செய்யும் இடத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும் கிடைக்கும். தொழில் சனி காலம் என்பதால் வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சனீஸ்வரரை வணங்க சிறப்பானப் பலன்களைப் பெறலாம். சனிக்கிழமைகளில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றி வழிபடலாம். வீட்டில் சுப காரியங்கள் அதிகம் நடைபெறும். இனி வரும் காலம் அற்புதமான காலமாக அமையப்போகிறது. 

கடகம்: அஷ்டமத்து சனி முடிந்து விட்டது. பாக்ய சனி காலம் என்பதால் குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கும். இனி வரும் சனிபகவான் உங்களுக்கு யோகங்களை அள்ளித்தரப்போகிறார். காரணம் குரு பகவானும் 11ஆம்  வீட்டில் அமர்ந்து லாபத்தை தருகிறார். சனி பகவான் மிகச்சிறந்த தன யோகத்தை தரப்போகிறார். பாக்யசனி காலம் தொடங்குகிறது என்பதால் ஸ்ரீ விநாயகரை வணங்கலாம். உங்களின் குல தெய்வத்தை விடாமல் கும்பிடுங்கள். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் லட்சுமி வராகப்பெருமாளை வணங்க மேலும் நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: அஷ்டமத்து சனி காலத்தில் அகலக்கால் வைக்கக்கூடாது. தொழில் வியாபாரத்தில் அதிக அளவில் பணமுதலீடுகளை செய்ய வேண்டாம்.  புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. யாருக்கும் பணத்தை கடனாக தர வேண்டாம். திங்கட்கிழமைகளில் சிவ ஆலயம் சென்று வரலாம். குச்சனூரில் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவானை வழிபட்டு வருவது நல்லது.

கன்னி: சனி பகவான் ஏழாம் வீட்டில் அமர்ந்து கண்டச்சனியாக பயணம் செய்தாலும் அற்புதமான கால கட்டம். வேலை தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சனிபகவானின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. கன்னி ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலம் தொடங்குகிறதே கவலை வேண்டாம். வாலாஜாபேட்டையில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்கினால் நன்மைகள் நடைபெறும்.  சனிக்கிழமைகளில் சனிபகவானையும், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே அர்த்தாஷ்டம சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம். திருமணத்தடை நீங்கும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.  பணம் சேர்க்க முடியாது அதற்கு பதிலாக சொத்துக்கள் வாங்குவீர்கள். சச மகா யோகத்தால் வீடு, வண்டி வாகன வசதி கிடைக்கும். தீர்க்கப்படாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும் வழக்குகள் சாதகமாகும். ஆட்சி பெற்ற சனியால் பலமடைவீர்கள். அதே நேரத்தில் செலவுகள் அதிகமாகும். அர்தாஷ்டம சனியால் பாதிப்புகள் குறைய பெருமாள், பைரவரை தினமும் வழிபட்டு வருவது நல்லது.

மகரம்: சனி பகவானை ஆட்சி நாதனாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு 2025 ஆண்டு உங்கள் ஆண்டாக அமையப்போகிறது. ஏழரை ஆண்டு காலம் கஷ்டத்தை சந்தித்த உங்களுக்கு சனிபகவான் நிறைய வருமானத்தை தரப்போகிறார். கடன் பிரச்சினைகளை படிப்படியாக தீர்க்கப்போகிறார். சொத்து சுகங்களை வாரி வழங்கப்போகிறார். இனி பல சாதனைகளை நிகழ்த்தப்போகிறீர்கள். சந்தோஷங்களை உற்சாகத்துடன் அனுபவிக்கத் தயாராகுங்கள். அருகில் உள்ள சிவ ஆலயம் சென்று சனீஸ்வர பகவானையும், சிவபெருமானையும், அம்பாளையும் வணங்கி வந்தால் நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்: 5 ஆண்டு காலம் கும்ப ராசிக்காரர்களை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் சனி பகவான் பாத சனியாக தொடரப்போகிறார். பொறுமையும் நிதானமும் தேவை. சொந்த பந்தங்களிடம் ஏற்பட்ட பகை விலகும். ஏழரை சனியில் ஜென்ம சனி முடிந்து இரண்டாம் வீட்டில் பாத சனியாக 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடரப்போகிறார். வீண் வம்பு வாக்குவாதங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம்.  வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். சம்பள உயர்வும் கிடைக்கும் என்பதால் சங்கடப்பட வேண்டாம்.நிதானமும் பொறுமையும் அவசியம். 

மீனம்: உங்கள் ராசிக்கு இரண்டரை ஆண்டு காலம் விரைய சனியாக பாடாய் படுத்திய சனி பகவான் இனி ஜென்ம சனியாக தொடரப்போகிறார். உங்கள் ராசிக்கு 
இரண்டரை ஆண்டு காலம் தலைமேல் அமர்ந்து பயணம் செய்வார். கல்யாண யோகம் கைகூடி வரப்போகிறது. பிரிந்தவர்கள் ஒன்று சேரப்போகின்றனர். பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மிகப்பெரிய பட்டமும் பதவியும் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். அதே நேரத்தில் அதிக பணத்தை முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம். 

பொங்கு சனீஸ்வரர் ஆலயம்: சனி பகவானால் பாதிப்பிற்கு ஆளாகி வருபவர்கள் சனி பகவான் ஆலயங்களுக்கு செல்லலாம். சனிபகவானுக்கு திருவாரூர் அருகே திருக்கொள்ளிக்காடு என்னும் ஊரில் பொங்கு சனீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது இங்குள்ள பொங்கு சனீஸ்வரர் வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை திருஞானசம்பந்தரால் மூன்றாம் திருமுறையில் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் சனிப்பெயர்ச்சிக்கான பரிகாரத்தலமாகவும் இந்த கோவில் விளங்குகிறது. திருநள்ளாறு சனிபகவானை சனிக்கிழமை நாளில் சென்று தரிசனம் செய்து வர சனியால் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow