பஸ் மீதேறி ஆட்டம் போட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. சென்னையில் ரூட்டு தல அட்ராசிட்டி

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மீது ஏறி அடாவடி செய்த வீடியோ வெளியாகி உள்ளது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வெடி வெடித்து சாலையின் நடுவே ஆட்டம் போட்டு போக்குவரத்துக்கு இடைஞ்சல் செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Jul 9, 2024 - 12:58
 0
பஸ் மீதேறி ஆட்டம் போட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.. சென்னையில் ரூட்டு தல அட்ராசிட்டி
Pachayappas college route thala

ரூட்டு தல விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்படுவது வழக்கமாகியுள்ளது ஒரு பகுதியில் இருந்து பேருந்து ஏறும் மாணவர்களில் யார் பெரியவர்கள் என்பதில் பிரச்சனை ஏற்படுகின்றது அவ்வாறு பிரச்சனை ஏற்படும் பொழுது மாணவர்கள் இரு தரப்பாக பிரிந்து ஒருவருக்கு ஒருவர் தாக்குவது வாடிக்கையான நிகழ்வாக உள்ளது. 

பச்சையப்பன் கல்லூரியில் பருவத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் பூந்தமல்லி ரூட்டை சேர்ந்த மாணவர் ஒருவரை பாரிமுனை பேருந்து ரூட்டைச் சேர்ந்த மாணவர்கள் தாக்கி சென்றுள்ளனர், தாக்குதலில் பூந்தமல்லி ரூட்டைச் சேர்ந்த மாணவர் பீட்டருக்கு காயம் ஏற்பட்டது, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் கடந்த 3ஆம் தேதி திருத்தணி கும்முடிபூண்டி ரூட்டை சேர்ந்த மாணவர்கள் கையில் பேனருடன் கல்லூரி முன்பாக திரண்டு முழக்கமிட்டனர், அதனால் கல்லூரியின் கேட் மூடப்பட்டது. இதனையடுத்து கடந்த 5ஆம் தேதியன்று பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ரூட்டு தல பிரச்சனையில் ஈடுபட்டு பஸ்ஸின் மீது ஏறி ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

பிராட்வே முதல் பூந்தமல்லி வரையிலான ரூட் மாணவர்கள் ரூட்டு தல விவகாரத்தில் சாலை நடுவே பட்டாசு கொளுத்தி போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தினர்.பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பேருந்து மீது ஏறி ஆட்டம் போட்டு போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தியதுடன் சாலையில் நடந்து சென்ற பயணிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் தொல்லை கொடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

காவல்துறையினர் முன்னிலையில் நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் பேருந்தை நிறுத்தி பேருந்தின் மீது ஏறி ஆட்டம் போட்டதும், கல்லூரியின் குறுக்காக நின்று சாலை மறியலை ஏற்படுத்தியதும், சாலையின் நடுவே பட்டாசு வெடித்து போக்குவரத்தை தடுத்ததுமான வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பேருந்தில் இருந்து இறங்கிய மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரியின் கேட் மூடப்பட்ட நிலையில் கேட்டின் மீதேறி பல மாணவர்கள் ஆட்டம் போட்ட வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அடிக்கடி இது போன்ற சம்பவங்கள் ஏற்படுவதால் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தகராறில் ஈடுபடும் மாணவர்களுக்கு பலமுறை அறிவுரை கூறியும் கேட்காமல் இருப்பதினால் மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow