கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்

இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.

Sep 16, 2024 - 16:21
Sep 16, 2024 - 17:54
 0
கோலி, ரோஹித் கிடையாது.. இவர்தான் அதிக மதிப்புமிக்க வீரர்.. அஸ்வின் புகழாரம்
ஜாஸ்பிரிட் பும்ரா தான் - ரவிச்சந்திரன் அஸ்வின்

வங்கதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி வரும் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெறுகிறது. 2வது டெஸ்ட் போட்டி செப்டம்பர் 27ம் தேதி தொடங்கி அக்டோபர் 1ம் தேதி வரை நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து முதல் டி20 போட்டி அக்டோபர் 7ம் தேதியும், 2வது டி20 போட்டி அக்டோபர் 10ம் தேதியும், 3வது டி20 போட்டி அக்டோபர் 13ம் தேதியும் நடைபெற உள்ளன. வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி போட்டிக்கான இந்திய அணி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது இரண்டு அணி வீரர்களும் முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியா-வங்கதேசம் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது.

இதேபோல் முதல் டி20 போட்டி குவாலியரில் உள்ள மாதவராவ் சிந்தியா மைதானத்தில் நடைபெறுகிறது. 2வது டி20 போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்திலும், 3வது டி20 போட்டி ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி மைதானத்திலும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், இந்திய அணியின் மதிப்புமிக்க வீரர் ஜாஸ்பிரிட் பும்ரா தான் என்று இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். ஜாஸ்பிரிட் பும்ரா கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பந்துவீசி, இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்துள்ளார்.

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான கடந்த டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் கூட, அற்புதமாக பந்துவீசி இருந்தார். மேலும், அந்த போட்டியில் 4 ஓவர்கள் வீசிய பும்ரா 18 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து, 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார். மேலும், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில், 15 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தையும் பிடித்திருந்தார்.

இது குறித்து கூறியுள்ள அஸ்வின், “சென்னை ரசிகர்கள் பந்துவீச்சாளர்களுக்கு நிறைய மதிப்பளிப்பவர்கள். கடந்த 4-5 நாட்களுக்கு முன்பு பும்ரா, ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு ரஜினி சிகிச்சை அளித்தோம். நாங்கள் (சென்னை மக்கள்) பந்துவீச்சாளர்களை மிகவும் அழகாக நடத்துகிறோம். அவரை ஒரு சாம்பியனாக நடத்த வேண்டும். மற்ற எந்த வீரரின் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால், ஜாஸ்பிரிட் பும்ரா இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக மதிப்புமிக்க வீரராக உள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “இந்தியா எப்போதும் பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் நிறைந்த நாடாக உள்ளது. அதில் எந்த மாற்றமும் நிகழப்போவது இல்லை. ஆனால், ஜாஸ்பிரிட் பும்ராவை கொண்டாடுவதில், பெருமையும், மகிழ்ச்சியும் அடைகிறோம். ஜாஸ்பிரிட் பும்ரா ஒரு தலைமுறையில், ஒரு முறை கிடைக்கக்கூடிய பந்து வீச்சாளர். நாம் அவரை இன்னும் அதிகமாக கொண்டாட வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow