ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை.. புதூர் அப்புவிற்கு டெல்லியில் ஸ்கெட்ச் போட்ட போலீஸார்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் நாட்டு வெடிகுண்டை சப்ளை செய்த, புதூர் அப்புவை டெல்லியில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர்.

Sep 22, 2024 - 09:32
Sep 22, 2024 - 09:36
 0
ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு வெடிகுண்டு சப்ளை.. புதூர் அப்புவிற்கு டெல்லியில் ஸ்கெட்ச் போட்ட போலீஸார்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் புதூர் அப்பு கைது

முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆர்ம்ஸ்டாங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் பாஜக நிர்வாகி அஞ்சலை, முன்னாள் காங்கிரஸ் நிர்வாகி அஸ்வத்தாமன், ரவுடி நாகேந்திரன் உட்பட  27 நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கில் மூளையாக செயல்பட்ட ரவுடி சம்போ செந்தில், மற்றும் ரவுடியான சீசிங் ராஜா, வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வருகின்றனர். இவர்களைப் பிடிப்பதற்காக சென்னை தனிப்படை போலீசார் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக இவ்வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று டெல்லியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோடம்பாக்கத்தை சேர்ந்த புதூர் அப்பு மீது மயிலாப்பூரில் பில்லா சுரேஷ், விஜி ஆகிய இரட்டை கொலை வழக்கும் மற்றும் பட்டினப்பாக்கத்தில் நடந்த கோடம்பாக்கம் சிவா கொலை வழக்கும் உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது.

குறிப்பாக புதூர் அப்பு மறைந்த ரவுடியான மயிலை சிவகுமாரின் அசோசியேட்டாக இருந்து வந்ததும் தெரிய வந்தது. மேலும், ஆம்ஸ்ட்ராங்கை கொல்ல நாட்டு வெடிகுண்டுகள் கேட்டு வழக்கறிஞர் அருள், ரவுடி புதூர் அப்புவை நாடியதாகவும், அதன் பேரில் 4 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்துள்ளார்.

ஆனால், முதலாவதாக தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகளை கும்மிடிப்பூண்டியில் கொண்டுசென்று வெடிக்க செய்தபோது, போதுமான வீரியம் இல்லாததால் மீண்டும் ஆந்திராவில் இருந்து மருந்துகளை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டை தயார் செய்ததாக புதுர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கி எடுத்தால் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய திட்டமிட்டு அங்கேயே நாட்டு வெடிகுண்டுகளை விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே இவ்வழக்கில் கைதான புதூர் அப்புவின் கூட்டாளிகள் ராஜேஷ், கோபி, குமரன் ஆகியோர் மூலமாக தயார் செய்து இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட புதூர் அப்புவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு டிரான்ஸிட் வாரண்ட் பெற்றுக்கொண்டு சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். பின்னர் விசாரணை நடத்தி விட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இவ்வழக்கில் மொத்தம் 28 நபர்களை போலீசார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow