காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்.. பதவி தப்புமா?.. 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு

நெல்லை, கோவை மேயர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில், அடுத்ததாக காஞ்சிபுரம் மேயருக்கு சொந்த கட்சி கவுன்சிலர்களால் சிக்கல் உருவாகி உள்ளது. வரும் 29ம் தேதி அன்று மாநகராட்சி கூட்டம் நடைபெறும் நிலையில் அப்போது மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது

Jul 10, 2024 - 12:55
Jul 10, 2024 - 14:47
 0
காஞ்சிபுரம் மேயருக்கு சிக்கல்.. பதவி தப்புமா?.. 29ல் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு
Kanchipuram Mayor Mahalakshmi Yuvraj

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயராக திமுகவைச் சேர்ந்த எம்.மகாலட்சுமி யுவராஜ் பெரும்பான்மையான உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு மேயராக பொறுப்பேற்றுக் கொண்டாவர். காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர். 50 வார்டுகளுக்கான தேர்தலில் தி.மு.க. கூட்டணி 32 வார்டுகளில் வெற்றி பெற்றது. அதிமுக 9 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், பாஜக 1 இடத்திலும், சுயேச்சைகள் 6 இடத்திலும் வெற்றி பெற்றனர்.

இதில் 9வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.மகாலட்சுமி யுவராஜை காஞ்சிபுரத்தின் மேயர் வேட்பாளராக திமுக தலைமை அறிவித்தது.
அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா சோபன்குமார் போட்டியிட்டார். அவருக்கு சுயாட்சிகள்,  பாமக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கவுன்சிலர்கள் ஆதரவளித்தனர். இதனால் முதலில்  பெரும்பான்மையை நிரூபிக்கவே, மாநகராட்சி பிரச்சனை ஏற்பட்டது.  இதனை தொடர்ந்து மகாலட்சுமி யுவராஜ் 29 வாக்குகள் பெற்று காஞ்சிபுரத்தின் முதல்  மேயராக பதவி  ஏற்றார்.சூர்யா சோபன்குமார் 20 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். 

புதிய மேயராக பதவி ஏற்றதிலிருந்து, மகாலட்சுமி யுவராஜுக்கு பல்வேறு சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் தற்பொழுது காஞ்சிபுரத்தின் துணை மேயராக உள்ளார். துணை மேயர் தரப்புக்கும் மற்றும் மேயர் தரப்பிற்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.  அதே போன்று மாநகராட்சி கூட்டங்களின்போது, பலமுறை சலசலப்பு போராட்டங்களும் நடைபெற்ற வருகிறது. இந்த நிலையில்தான் காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக 33 கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். 

மேயரின் கணவர் யுவராஜ் பண வசூலில் ஈடுபடுகிறார் என கவுன்சிலர்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளனர்.பாதாள சாக்கடை பணி, குடிநீர் பிரச்சினைகளை சரி செய்ய முடியவில்லை எனவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளனர்.காஞ்சிபுரம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத்திட்டம் மேற்கொள்ள அனுமதி கிடைத்தது. அதற்கான ஒப்பந்த புள்ளி தலைமை சொல்லும் நபருக்கு கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் மேயர் மகாலட்சுமிக்கு பெரிய அளவில் தொகை கிடைத்துள்ளதாகவும் அதனை வைத்து கிழக்கு கடற்கரை சாலையில் பங்களா, போரூரில் வீடு, வையூரில் பல ஏக்கர் நிலம்,ஆகியவற்றை வாங்கியதாக புகார் கூறியுள்ளனர் கவுன்சிலர்கள். அதே நேரத்தில் புகார்கள் அனைத்தும் பொய்யானவை என உளவுத்துறை விசாரித்து ரிப்போர்ட் அனுப்பியுள்ளதாம். 

இதனிடையே மகாலட்சுமி யுவராஜ் மேயராக தொடர்ந்து செயல்பட்டால் எங்கள் பகுதி மக்களின் பிரச்சினைகளை சரி செய்யவே முடியாமல் போய் விடும்.எனவே மேயரை அப்பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும். அவர் பெரும்பான்மையை நிருபிக்க மாமன்ற கூட்டத்தை கூட்டஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு கொடுத்துள்ள புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.கவுன்சிலர்களின் இந்த  முடிவு  காஞ்சிபுரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி கவுன்சிலர்களை அழைத்து,நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு சமாதானம் செய்து வைத்தார்.அதனை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் மேயர் மகாலட்சுமியின் தலைமையின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது எனவும் மேயரை கட்டாயம் மாற்ற வேண்டும் என அமைச்சரிடம் கோரிக்கை வைத்தனர்.

மேயருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உத்தரவிட கோரி கடந்த மாதம் ஆட்சியரிடம் மனு அளித்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி தற்போது மாநகராட்சி ஆணையரிடமும் திமுக கவுன்சிலர்கள் மனு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக வரும் 29ம் தேதி அன்று மாநகராட்சி கூட்டம் நடைபெறும் நிலையில் அப்போது மேயர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இதில் மேயர் மகாலெட்சுமி பெரும்பான்மையை நிரூபித்தால் மட்டுமே பதவியில் தொடரமுடியும் என்ற நெருக்கடி எழுந்துள்ளது.மகாலட்சுமியின் மேயர் பதவி தப்புமா? 29ஆம் தேதி தெரியவரும். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow