Nagercoil Kasi Case : ஆயுள் தண்டனை பெற்ற நாகர்கோவில் காசி நினைவிருக்கா?.. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புது உத்தரவு
Nagercoil Kasi Case in Madurai High Court Bench : இளம் பெண்களை ஏமாற்றி நிர்வாண படம் எடுத்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட நாகர்கோவில் காசி தனது ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தனக்கு ஜாமின் வழங்க உத்தரவிட கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
Nagercoil Kasi Case in Madurai High Court Bench : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேர்ந்தவர் சுஜி என்ற காசி.இவர் சமூக வலைதளம் மூலமாக பெண்களிடம் பழகி, அவர்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டி பணம் பறித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையிலும், கந்து வட்டி புகாரின் அடிப்படையிலும் நாகர்கோவில் கோட்டார், வடசேரி, நேசமணிநகர் போலீஸ் நிலையம், நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் ஆகியவற்றில் 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
காசி வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது.இது தொடர்பான புகாரில் கடந்த 2020ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்ட காசி பின்னர் குண்டர் சட்டத்தின் கீழும் கைதானார்.காசியின் லேப்டாப், மொபைலில் 400 ஆபாச வீடியோக்கள் 1,900 நிர்வாணப்படங்கள் இருந்ததாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் விசாரணை நடத்திய நாகர்கோவில் விரைவு நீதிமன்றம் காசிக்கு ஆயுள் தண்டனையுடன் ரூ.1.10 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில் ஆயுள் தண்டனை அனுபவதித்து வரும் நாகர்கோவில் காசி உயர்நீதிமன்ற கிளையில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில்,எனக்கு எதிராக வழங்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் மேலும் தனக்கு ஜாமின் வழங்க வேண்டும்.என கோரி மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன், சத்திய நாராயண பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது,அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி நூற்றுக்கணக்கான இளம் பெண்களை பள்ளி மாணவிகளை ஆசைவார்த்தை கூறி பாலியல் தொந்தரவு செய்து புகைப்படம் எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை நீதிமன்றம் விசாரணை செய்து தண்டனை வழங்கி உள்ளது இவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது என அரசு தரப்பின் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
இதனை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரருக்கு எதிரான குற்றம் சந்தேகம் இன்றி நிருபிக்கப்பட்டு உள்ளது. இதில் குற்றத்தின் தன்மை கருதி, ஜாமின் மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.மேலும் மனுதாரரின் மேல் முறையீட்டு மனு குறித்து நாகர்கோயில் சிபிசிஐடி போலீசார பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.
What's Your Reaction?