'எம்புரான்' விவகாரம்: வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் கவலையளிக்கிறது.. பினராயி விஜயன் பதிவு
எம்புரான் மற்றும் அதன் படைப்பாளர்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த 2019-ஆம் ஆண்டு நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் வெளியான 'லூசிபர்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகமான ‘எம்புரான்’ திரைப்படம் மார்ச் 27-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் மோகன்லால், பிரித்விராஜ், மஞ்சுவாரியர், டொவினோ தாமஸ், சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆசிர்வாத் சினிமாஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். இப்படம் வெளியான 48 மணி நேரத்தில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்திருந்தது.
காட்சிகள் நீக்கம்
இந்நிலையில், ‘எம்புரான்’ திரைப்படத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் பற்றி மறைமுகக் குறிப்பு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இப்படம் தேசிய அளவில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ‘எம்புரான்’ திரைப்படத்திற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள பதிவில், "ஒரு கலைஞனாக எனது திரைப்படங்கள் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் மற்றும் மதத்தின் மீதும் வெறுப்பை ஊக்குவிக்காமல் இருப்பதை உறுதி செய்வது எனது கடமை.
அந்த வகையில், 'எம்புரான்' திரைப்படத்தால் என்னை நேசிப்பவர்களுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இத்துயரத்திற்கு நானும் படக்குழுவினரும் மனதார வருந்துகிறோம். சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்க நாங்கள் கூட்டாக முடிவு செய்துள்ளோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
பினராயி விஜயன் ஆதரவு
அதேபோல், எம்புரான் படத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக கேரள மாநில சிபிஎம், காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “எம்புரான் மற்றும் அதன் படைப்பாளர்களுக்கு எதிரான வகுப்புவாத வெறுப்பு பிரச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது.
கருத்து வேறுபாடு உத்திகளை அடக்குவதற்கு வற்புறுத்தல் மற்றும் மிரட்டல் தருவது போன்றவை சர்வாதிகாரம் வளர்ந்து வரும் போக்கிற்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும். கருத்து சுதந்திரம் என்பது ஒரு அடிப்படை உரிமை; அதைப் பாதுகாக்க நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
The communal hate campaign against #Empuraan and its creators is deeply disturbing. This is yet another example of a growing pattern where coercion and intimidation are used to silence dissent - tactics that have always been hallmarks of authoritarianism. Undermining creative… — Pinarayi Vijayan (@pinarayivijayan) March 30, 2025
What's Your Reaction?






