எத்தனை முறை அவகாசம் கேட்பீர்கள்.. செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் நீதிபதி கடும் கண்டனம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் வழக்கு தொடர அனுமதி கிடைக்கவில்லை என தொடர்ந்து எத்தனை அவகாசம் கேட்பீர்கள் என அரசு வழக்கறிஞருக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Sep 12, 2024 - 17:46
 0
எத்தனை முறை அவகாசம் கேட்பீர்கள்.. செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கில் நீதிபதி கடும் கண்டனம்
senthil balaji case

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த 2011-15ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது, அத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக    கணேஷ் குமார் உள்ளிட்ட பாதிக்கப்பட்டவர்கள் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

இந்தப் புகாரின் அடிப்படையில் செந்தில் பாலாஜி, அவரது நண்பர்கள் பிரபு, சகாயராஜன், அன்னராஜ் உள்ளிட்டோர் மீது நம்பிக்கை மோசடி, ஏமாற்றுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 2017ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி உள்ளிட்டோரை விடுவித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் விசாரித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டது.இதனையடுத்து, விசாரணை நடத்திய மத்திய குற்றப் பிரிவு காவல் துறை, செந்தில் பாலாஜிக்கு எதிராக சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏகள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தனர்.அப்போது, இந்த வழக்கில் குற்றம்சாட்டபட்ட இன்னும் சிலரை விசாரிக்க அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கூடுதல் குற்றப்பத்திரிகை ஏற்று வழக்கை நடத்துவதற்கான அனுமதி இன்னும் தமிழக அரசிடம் இருந்து கிடைக்கவில்லை என மீண்டும் தெரிவித்தார்.

அப்போது, குற்றவாளியாக சேர்க்கப்பட சில போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் வழக்கறிஞர் ஆஜரான ஜார்ஜ் வில்லியம்ஸ் தங்களை தேவையின்றி வழக்கில் சேர்த்துள்ளதாக தெரிவித்தார். அப்போது நீதிபதி, கூடுதல் குற்றபத்திரிக்கையில் சுமார் 900 பேர் வரை சேர்த்துள்ளனர். எனவே, அனைவருக்கும் விசாரணை அனுமதி கிடைத்தவுடன்தான் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தொடங்க முடியும் எனக் கூறி, விசாரணையை தள்ளிவைத்தார்


இந்த வழக்கு நீதிபதி ஜி. ஜெயவேல் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கை தொடர அனுமதிக்கும் கடிதம் இன்னும் தமிழக அரசின் பொதுத் துறையிடம் இருந்து கிடைக்கவில்லை எனவே அனுமதி கடிதத்தை சமர்பிக்க 3 வாரம் அவகாசம் வேண்டும் என கோரினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த நீதிபதி கடந்த மாதமே அனுமதி கிடைத்துவிட்டதாக செய்திகள் வந்தது. ஆனால் தற்போது பழைய காரணத்தை கூறி கால அவகாசம் கோருவது ஏற்க முடியாது என தெரிவித்தார்.பின்னர் விசாரணை செப்டம்பர் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி அன்று வழக்கு தொடர அனுமதி அளித்தது தொடர்பான விபரங்கள் மற்றும் வழக்கு விசாரணை நிலையை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்து விசாரணை தள்ளிவைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow