ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

தன்னை கைது செய்த உத்தரவை ரத்துசெய்ய வேண்டும் என ஜாபர் சாதிக், தாக்கல் செய்திருந்த மனுவுக்கு திஹார் சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Sep 4, 2024 - 18:26
 0
ஜாபர் சாதிக் மீதான சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு : சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு
ஜாபர் சாதிக் மனுவுக்கு சிறை நிர்வாகம், அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவு

திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் (Jaffer Sadiq) கடந்த மார்ச் மாதம் 9ஆம் தேதி கைது செய்யப்பட்டார். ஜாபர் சாதிக்கை கைது செய்த டெல்லி மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஜாபர் சாதிக். மேலும், அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக்கை கடந்த 28ம் தேதி கைது செய்தனர். இதனை எதிர்த்து ஜாபர் சாதிக் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு டெல்லி போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

ஜாமின் பெற்றாலும், ஜாபர் சாதிக்கால், சிறையில் இருந்து வெளியே வர முடியாது நிலை ஏற்பட்டது. ஏனென்றால், சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் சென்னை அமலாக்கத்துறை ஜாபர் சாதிக்கை கைது செய்துள்ள நிலையில், அந்த வழக்கில் இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.

ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் சர்வதேச போதை பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் மூலமாக கிடைத்த சட்ட விரோத பணத்தால் பயனைடைந்த பிரதான பயனாளி என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் உள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது.

போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் சலீம் உட்பட மொத்தம் ஏழு பேரை மத்திய போதை பொருள் தடுக்க பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்திருப்பதாக கூறி அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து, ஜாஃபர் சாதிக்கின் சகோதரர் சலீமையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

குறிப்பாக இவ்வழக்கில் போதைப்பொருள் விற்பனை மூலமாக கிடைத்த சட்டவிரோத பணத்தை பல்வேறு தொழில்களுக்கு பயன்படுத்தி இருப்பதை அமலாக்கத் துறையினர் கண்டுபிடித்த நிலையில், ஜாபர் சாதிக்கின் சகோதரர் சலீம் வங்கி கணக்கில் விழுந்த பணம் குறித்தான தகவல்களை விசாரிக்க, சலீமை ஏழு நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அமலாக்க துறையினர் ஜாபர் சாதிக், அவரது சகோதரர் சலீம் உள்பட 10 பேரை எஃப்.ஐ.ஆரில் சேர்த்துள்ளது. குறிப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு 38 கிலோ கேட்டமைன் போதை பொருள் கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக், சலீம், பெரோஸ் கான், நூர் உள்ளிட்ட பல பேர் மீது மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதில் சலீம் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர். 

இந்நிலையில் இந்த வழக்கில், கைது செய்த 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாபர் சாதிக்கின் மனுவுக்கு அமலாக்கத்துறை, திஹார் சிறை நிர்வாகம் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஒரு வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow