ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்... தீவிர விசாரணை!

ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

Jul 6, 2024 - 22:05
Jul 8, 2024 - 12:29
 0
ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு... மேலும் 3 பேரை கைது செய்த போலீசார்... தீவிர விசாரணை!
ஆம்ஸ்ட்ராங் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று இரவு தனது வீட்டின் அருகில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பெரம்பூர் பகுதியில் செம்பியம் காவல் நிலையம் அருகே உணவு டெலிவரி செய்வதுபோல் வந்த மர்ம கும்பல் இந்த கொலையை அரங்கேற்றியுள்ளனர்.

இந்த படுகொலை தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் உடல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  

அப்போது மருத்துவமனை வெளியே திரண்ட பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், ''ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்ட அவர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு இறுதிச்சடங்கு நாளை மதியம் 2 மணிக்கு நடைபெற உள்ளது. அவரது உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய ஆதரவாளர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் அதற்கு காவல்துறை மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை முன்பு திரண்டு பகுஜன் சமாஜ் ஆதரவாளர்கள், உறவினர்கள் இரவிலும் போராட்டம் நடத்தினார்கள். நீண்ட நேரம் போராட்டம் நடத்திய அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அதன்பின்னர் ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் உடலை அவரது அண்ணன் மகன் கணேசன் என்ற மில்லர் பெற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் அயனாவரத்தில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அதன்பிறகு பெரம்பூர் பந்தர் கார்டன் பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட உள்ளது.

ஆம்ஸ்ட்ராங்க் கொலை வழக்கு தொடர்பாக போலீசார் ஏற்கெனவே 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், கோகுல், விஜய், சிவசக்தி என மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow