நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?... உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

Jul 8, 2024 - 08:03
 0
நாடு முழுவதும் எதிர்ப்பு அலை... 'நீட்' தேர்வு ரத்து செய்யப்படுமா?...  உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!
நீட் தேர்வு

டெல்லி: நீட் தேர்வு முறைகேடு தொடர்பான வழக்குகள் அனைத்தும் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. இதனால் நீட் தேர்வு ரத்து செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்தியாவில் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு 'நீட்' என்னும் நுழைவுத் தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. மிகவும் கடினமான இந்த தேர்வுக்கு தேர்ச்சி பெற முடியாததால் ஏராளமான மாணவர்கள் தங்களது உயிரை மாய்த்துள்ளனர். 

மாணவர்களின் உயிருக்கு உலை வைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் அல்லது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் மத்திய அரசு எதற்கும் செவிசாய்க்காமல் தொடர்ந்து நீட் தேர்வை நடத்தி வருகிறது.

இதற்கிடையே கடந்த மே மாதம் 5ம் தேதி இளநிலை நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வில் முன்கூட்டியே வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அதாவது முன் எப்போதும் இல்லாத வகையில் அதிக அளவிலான மாணவர்கள் 720க்கு 720 என முழுமையான மதிப்பெண்கள் பெற்றதும், ஒரே தேர்வு மையங்களை சேர்ந்த பலர் முதலிடம் பிடித்ததும் சந்தேகத்தை அதிகரித்தது.

இதனால் நீட் தேர்வு எழுதியவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், ‘’ நீட் தேர்வில் முறைகேடு நடந்துள்ளதால் லட்சக்கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,564 பேருக்கு கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண்களை தேசிய தேர்வு முகமை வழங்கியுள்ளதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’’என கூறப்பட்டு இருந்தது.

ஆனால் நீட் தேர்வை ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், ’’கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும். மறுதேர்வை எழுதாதவர்களுக்கு கருணை மதிப்பெண்களை கழித்து அசல் மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்க வேண்டும்’’ என்று தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவிட்டது.

இதன்பிறகு நீட் தேர்வு முறைகேடுகளை ஒப்புக்கொண்ட மத்திய கல்வி அமைச்சகம், இது தொடர்பான விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைத்தது. அதன்பேரில் குஜாரத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் தீவிர விசாரணையை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் முறைகேடு தொடர்பாக முக்கிய குற்றவாளிகளை கைது செய்து வருகின்றனர். 

இதனைத் தொடர்ந்து நீட் தேர்வு முறைகேடு விவகாரம் பூதாகரமாக வெடித்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம் உள்பட பல்வேறு மாநில அரசுகளும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளன. 

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு சட்டமன்றத்திலும், நீட் தேர்வு முறைகேடுகளுக்கு தீர்வு காண வேண்டும் என கேரள சட்டமன்றத்திலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மக்களவை, மாநிலங்களவையில் இந்தியா கூட்டணி கட்சியினர் வலியுறுத்தி வெளிநடப்பு செய்தனர். 

இதற்கிடையே நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் 38 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான மனுக்கள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. 

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்குகளை விசாரிக்க உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நாடு முழுவதும் மாணவர்களும் போராட்டம் நடத்தி வருவதால் உச்சநீதிமன்றம் நீட் தேர்வை ரத்து செய்து உத்தரவிடுமா? அல்லது நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பிக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow