காணும் இடமெங்கும் கறுப்புகொடி காட்டுவோம் அண்ணாமலையை எச்சரிக்கும் அதிமுகவினர்

காணும் இடமெங்கும் கறுப்புகொடி காட்டுவோம் என்று அண்ணாமலைக்கு எதிராக அதிமுகவினர் போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர். சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Aug 26, 2024 - 16:14
 0
காணும் இடமெங்கும் கறுப்புகொடி காட்டுவோம் அண்ணாமலையை எச்சரிக்கும் அதிமுகவினர்
annamalai vs edappadi palanisamy

அதிமுக பற்றியோ, எடப்பாடி பழனிச்சாமி  பற்றியோ, ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம் என்று அதிமுகவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக தென் மாவட்டங்களில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாகவே அதிமுக பாஜக இடையே வார்த்தை போர் நீடித்து வருகிறது. கூட்டணியில் இருந்த போதும் சரி கூட்டணியை விட்டு பிரிந்த போதும் சரி  அதிமுகவிற்கு எதிராக பேசி வந்தார் அண்ணாமலை. மக்களவை தேர்தலின் போது, ஜூன் 4ஆம் தேதிக்கு பிறகு அதிமுக எங்கே இருக்கப் போகிறது என்று பார்ப்போம். அதிமுக, பாஜக எத்தனை இடங்களில் வெற்றிபெறுகிறது என்றும் பார்ப்போம். எந்தக் கட்சி மக்கள் மனதை பிடித்திருக்கிறது? எந்தக் கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது? என்பதையும் பார்ப்பீர்கள். விளக்கு அணையும்போது பிரகாசமாகத்தான் எரியும்" என்று அதிமுகவை கடுமையாக தாக்கி பேசியிருந்தார் அண்ணாமலை.

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடையேயான வார்த்தை மோதல் மீண்டும் முற்றியுள்ளது. அண்ணாமலை பேச்சு சிறுபிள்ளைத்தனமானது என்றும் மைக் கிடைத்தால் எதை வேண்டுமானாலும் பேசுவார் என்றும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்த நிலையில், அவருக்கு அண்ணாமலை கடுமையாக பதிலடி கொடுத்தார்.

பாஜக சார்பில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டெண்டர் முறை கட்சியாக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கட்சி மாறியுள்ளது. எனது நேர்மை, நாணயத்தை பற்றி எடப்பாடி பழனிசாமி எனக்கு பாடம் எடுக்க வேண்டாம். எவரோ ஒருவரின் காலில் தவழ்ந்து பதவியைப் பிடித்த தற்குறி எடப்பாடி பழனிசாமி என்னைப் பற்றி பேச தகுதி இல்லை என காட்டமாக விமர்சித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள ஆர்.பி உதயகுமார், வரலாறு தெரியாத ஆக்டோபஸ் அண்ணாமலை மன அழுத்தத்தில், மனநலம் பாதிக்கப்பட்டது போல் நேற்றைய பொது கூட்டத்தில் பேசியிருக்கிறார். அண்ணாமலை சிறந்த மனநல மருத்துவரை சந்தித்து பரிசோதித்துக் கொள்ள வேண்டும். சித்தம் கலங்கியது போல் பேசுவது அவர்களுக்கு தெரியாது, மற்றவர்களுக்கும் புரியாது, பதவி வெறி மற்றும் மோகத்தினால் மன அழுத்தத்தினால் சித்தம் கலங்கி சித்த பிரம்மை பிடித்தது போல் அண்ணாமலை இருக்கிறார். இந்த உழைப்பும் இல்லாமல் ஒரு சொட்டு வேர்வை சிந்தாத அண்ணாமலை, மனநல மருத்துவரை அணுக வேண்டும். அப்படி இல்லை என்றால் நாங்கள் சைக்காலஜி படித்திருக்கிறோம். மதுரையில் நல்ல மருத்துவரை ஆலோசனைக்கு அனுப்புகிறோம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அண்ணாமலைக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில், அதிமுகவினர் கண்டன போஸ்டர்களையும் ஒட்ட துவங்கியிருக்கிறார்கள். அந்தவகையில், சிவகங்கை மாவட்ட அதிமுக சார்பில், திருப்புவனம், மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. கருப்புக்கொடி: அந்த போஸ்டரில் அண்ணாமலையே எச்சரிக்கிறோம். அதிமுக பற்றியோ, கழக பொதுச்செயலாளர் எடப்பாடியார் பற்றியோ, கழக அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.பி.உதயகுமார் பற்றியோ தவறாக பேசினால், அண்ணாமலையே நீ செல்லும் இடமெல்லாம் கருப்புக்கொடி காட்டுவோம்" என்று எச்சரிக்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. இளைஞரணி சார்பில் அண்ணாமலைக்கு எதிராக ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow