முறைத்து பார்த்தவருக்கு மிரட்டல்.. நண்பனுக்காக வீடு புகுந்து வெட்டிய கும்பல்..

தெருவில் பேசிக்கொண்டு இருந்தபோது நண்பனை முறைத்துப் பார்த்ததை அடுத்து, நண்பனுக்காக வீடுபுகுந்த வெட்டிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

Sep 16, 2024 - 15:03
Sep 16, 2024 - 15:20
 0
முறைத்து பார்த்தவருக்கு மிரட்டல்.. நண்பனுக்காக வீடு புகுந்து வெட்டிய கும்பல்..
கைதான அஸ்வின் மனோஜ், செல்லதுரை மற்றும் விமல் ராஜ் [இடமிருந்து வலம்] மற்றும் தலைமறைவாக உள்ள ஜெயக்குமார் [பெரிய புகைப்படம்]

சென்னை திருவான்மியூர் வால்மீகி தெருவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் அவரது நண்பர் பக்கத்து தெருவான புத்திரான் கன்னி அம்மன் கோவிலை சேர்ந்த ஜெயக்குமார் என்பவரை சந்தித்து பேசிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது ஜெயக்குமாரின் நண்பர்களான, திருவள்ளூர் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விமல் ராஜ் மற்றும் செல்லதுரை ஆகியோர் ஜெயக்குமாருடன் பேசிக் கொண்டிருந்த மணிகண்டனை முறைத்து அடிக்க வருவது போல் பார்த்துள்ளனர்.

உடனே மணிகண்டன் ஜெயக்குமாரின் நண்பர்களின் ஒருவனான விமல் ராஜை அழைத்து, "என்ன நீ முறைத்துப் பார்க்கிறாய்.. நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? இது எங்க ஏரியா பார்த்து இருந்துக்கோ" என கூறி மிரட்டியுள்ளார். இதனால் மணிகண்டனுக்கும் எதிரில் இருந்த ஜெயக்குமார், விமல் ராஜ், செல்லதுரை ஆகியோரோடு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜெயகுமார் நண்பன் விமல்ராஜ் "உங்க ஏரியவுக்கு வந்தால், என்னை மணிகண்டன் மிரட்டுகிறான். நீ என்னை மறித்து விடுகிறாய். எனக்கு இது தான் நீ கொடுக்கும் மரியாதையா" என கேட்டுவிட்டு தனது சொந்த ஊரான வேப்பம்பட்டு சென்றுள்ளார்.

தன்னுடன் இருந்த நண்பனை, மணிகண்டன் மிரட்டிய விவகாரத்தில் கோபத்தில் இருந்த ஜெயக்குமார், தன்னுடன் செல்லதுரை உட்பட 4 நண்பர்களை அழைத்து சென்று வால்மீகி தெருவில் இருந்த மணிகண்டனை அவனது வீட்டில் அத்துமீறி நுழைந்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதனை அடுத்து உடன் இருந்த அக்கம் பக்கத்தினர் இரத்த வெள்ளத்தில் கிடந்த மணிகண்டனை மீட்டு அடையரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சேர்த்தனர். தற்போது, மணிகண்டன் உயிருக்கு கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் குறித்து தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தபோது ஜெயக்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள், மணிகண்டனை வெட்டிவிட்டு தப்பி சென்றதை உறுதி செய்தனர். இதனையடுத்து ரகசிய இடத்தில் பதுங்கி தலைமறைவாக இருந்த ஜெயக்குமாரின் நண்பர்கள் 4 பேரை திருவான்மியூர் தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டதில் வேப்பம்பட்டு பகுதியை சேர்ந்த விமல் ராஜ் (30), அஸ்வின் (26) மற்றும் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த செல்லதுரை (22) திருநின்றவூர் பகுதியை சேர்ந்த மனோஜ் குமார் (22) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது என தெரியவந்தது. கைது செய்த 4 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட விமல் ராஜ், அஸ்வின், செல்லதுரை, மனோஜ் குமார் ஆகிய நான்கு பேர் மீதும் கொலை கொள்ளை வழக்குகள் உள்ள நிலையில், அடிக்கடி சிறை செல்வதால் ஏற்பட்ட நட்பு அடிப்படையில் இந்த சம்பவம் நடத்தியதாக விசாரணையில் தெரிவித்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow