தொழில்நுட்ப தேர்வுகளுக்கான பணியிடங்களை குறைத்த டிஎன்பிஎஸ்சி.. தேர்வர்கள் ஷாக்!

தமிழ்நாடு அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் மனதில் நிறைய கனவுகளுடன், விடா முயற்சியுடன் படித்து வருகின்றனர். ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வு முடிகளை காலதாமதமாக வெளியிட்டு வருவதாக தேர்வர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Aug 18, 2024 - 10:12
 0
தொழில்நுட்ப தேர்வுகளுக்கான பணியிடங்களை குறைத்த டிஎன்பிஎஸ்சி.. தேர்வர்கள் ஷாக்!
TNPSC

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு அரசு பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வுகள் மூலம் தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணி தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த 13ம் தேதி வெளியிட்டது. 

இதில் உதவி வேதியியலர், உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து), திட்ட உதவியாளர், மோட்டார் வாகன ஆய்வாளர், விடுதி கண்காணிப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர், இளநிலை வரைவு அலுவலர், இளநிலை தொழில்நுட்ப  ஏசி டெக்னீசியன் என பல்வேறு விதமான பதவிகளில் 861 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

மேற்கண்ட பணியிடங்களில் சில வகை பதவிகளுக்கு டிப்ளமோவும், சில பணிகளுக்கு ஐடிஐயும் கல்வித்தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு செப்டம்பர் 11ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள 2024ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வருடாந்திர தேர்வு அட்டவணையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வில் (டிப்ளமா, ஐடிஐ கல்வித்தகுதி) காலியிடங்களின் எண்ணிக்கை 730 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. 

ஆனால், எண்ணிக்கை குறைக்கப்பட்ட பதவிகளின் விவரம் குறிப்பிடப்படவில்லை. அதேபோல், கடந்த ஜூலை 26ம் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பதவிகளுக்கான தேர்வு பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு கல்வித்தகுதிக்குட்பட்ட அறிவிப்பில் 654 காலியிடங்கள் இடம்பெற்றிருந்தநிலையில், தற்போது அந்த காலியிடங்களின் எண்ணிக்கை 605 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த பதவிகளில் காலியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடப்படவில்லை

இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு வருகிற 24ம் தேதி முடிவடைகிறது. இரு தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வுகளிலும் காலியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டிருப்பதால் டிஎன்பிஎஸ்சி தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பொதுவாக டிஎன்பிஎஸ்சி காலியிடங்களின் எண்ணிக்கையை  அதிகரிப்பதே வழக்கம். ஆனால் அதற்கு மாறாக தற்போது காலியிடங்களின் எண்ணிக்கையை டிஎன்பிஎஸ்சி குறைத்துள்ளது .

இதற்கிடையே, திருத்தப்பட்ட வருடந்திர தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்றும் இடம் பெற்றிருக்கிறது. 50 காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு (பட்டப்படிப்பு, முதுகலை பட்டப்படிப்பு கல்வித்தகுதியுடன் நேர்காணல் உள்ள பதவிகள்) ஆகஸ்ட் 30ம் தேதி வெளியிடப்பட்டு அதற்கான போட்டித்தேர்வு நவம்பர் 18ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி திடீரென இரண்டு தேர்வுகளுக்கு காலி பணியிடங்களை குறைத்து இருப்பது இந்த பதவிக்கு விண்ணப்பித்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்நாடு அரசு வேலையில் சேர வேண்டும் என லட்சக்கணக்கானவர்கள் மனதில் நிறைய கனவுகளுடன், விடா முயற்சியுடன் படித்து வருகின்றனர். ஆனால் டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட தேர்வு முடிகளை காலதாமதமாக வெளியிட்டு வருவதாக தேர்வர்கள் மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow