ரூ.100 கோடி நில மோசடி வழக்கு.. முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் கைது - சிபிசிஐடி போலீஸ் அதிரடி
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக சிபிசிஐடி போலீசார் எம்ஆர் விஜயபாஸ்கரை தேடி வந்த நிலையில் இன்று கேரளாவில் கைது செய்துள்ளனர்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் சிலர் பத்திரப் பதிவு செய்ததாக மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் அளித்த புகாரில் 7 பேர் மீது கரூர் நகர காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.இதனால் கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாக இருந்து வருகிறார்.
கடந்த 12 ஆம் தேதி கரூர் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதற்கிடையில், 22 ஏக்கர் நிலத்தை பறித்துக் கொண்டதாக எம்.ஆர். விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர் உள்ளிட்ட 13 பேர் மீது வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தனது தந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் சிகிச்சையின் போது அவருடன் இருக்க வேண்டும் எனக்கூறி கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடைக்கால முன் ஜாமின் கேட்டு எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார் எம்ஆர் விஜயபாஸ்கர்.
இந்த நிலையில் ஒரு மாத காலமாக தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் வைத்து எம்ஆர் விஜயபாஸ்கரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். விரைவில் அவரை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?