நண்பனை வெட்டிக் கொன்ற ரவுடி கலைப்புலி ராஜா.. சுட்டுப்பிடித்த திருச்சி போலீஸ்
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அருகே பிரபல ரவுடி கலைப்புலி ராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்துள்ளனர்.போலீசார் சுட்டதில் ரவுடி கலைப்புலி ராஜாவுக்கு காலில் குண்டுக் காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆங்கரை வஉசி நகரைச் சேர்ந்தவர் நவீன்குமார் (30). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். அதேபோல் ஆதிகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா என்கிற கலைப்புலி ராஜா(27). இருவரும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள். கடந்த சில நாட்களுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜா மற்றும் நவீன் குமார் இருவர்களின் நண்பருக்கு பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த வாரம் இருவரையும் சமாதானப்படுத்தி வைப்பதற்காக நவீன் குமாரை பிறந்தநாள் விழாவிற்கு அழைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் கலைப்புலி ராஜா மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து நவீன்குமார் வெட்டி படுகொலை செய்தனர். இந்தக் கொலை வழக்கில்தான் ராஜாவை போலீஸார் தேடி வந்தனர். ஏற்கனவே அவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இச்சம்பவம் தொடர்பாக லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்த கலைபுலி ராஜாவை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் திருச்சி சிறுகனூர் அருகே கலைபுலி ராஜா சுற்றித் திரிவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தனிப்படை போலீசார் பதுங்கியிருந்த கலைப்புலி ராஜாவை பிடிக்க முயன்றனர். அப்போது அரிவாளால் போலீசாரை வெட்ட முயன்றார். இதனால் போலீசார் தற்காப்புக்காக ராஜாவின் வலது காலில் சுட்டனர். இதனால் படுகாயமடைந்த ராஜாவை ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
What's Your Reaction?