2வது முறை குண்டர் சட்டமா?.. யோகி ஆதித்தியநாத் ஆட்சியா?.. விளாசும் சீமான்

சகிப்புத்தன்மையற்ற திமுக அரசின் அடாவடித்தனங்களுக்கும், அட்டூழியப்போக்குகளுக்கும் மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

Aug 13, 2024 - 20:42
Aug 14, 2024 - 09:59
 0
2வது முறை குண்டர் சட்டமா?.. யோகி ஆதித்தியநாத் ஆட்சியா?.. விளாசும் சீமான்
சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதற்கு சீமான் கண்டனம்

பெண் காவலர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் 4ஆம் தேதி, தேனியில் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் குண்டர் சட்டம் உள்பட பல்வேறு பிரிவுகளில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சவுக்கு சங்கரின் தாயார் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சவுக்கு சங்கர் மீது போடப்பட்டிருந்த குண்டர் தடுப்பு சட்டத்தை ஆகஸ்ட் 9ஆம் தேதி ரத்து செய்தது. இந்நிலையில், தற்போது சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது இரண்டாவது முறையாக குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டத்தற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சவுக்கு சங்கர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஒரு யூடியூப் சேனலில், இரு சமூகத்தாரிடையே பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பேசியதாக நேதாஜி பேரவையை சேர்ந்த முத்து என்பவர் கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்பாக சவுக்கு சங்கரை மூன்று நாட்கள் போலீஸ் கஸ்டடிக்கு அனுமதி அளிக்க கோரி காவல்துறையினர் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த போலீஸ் கஸ்டடி மனு விசாரணைக்காக, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சவுக்கு சங்கர் இன்று கோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். எந்தவிதமான உடல் ரீதியான துன்புறுத்தல்கள் கூடாது என்ற கண்டிப்புடன், நீதிபதி சரவணபாபு ஒரு நாள் போலீஸ் கஸ்டடி கொடுத்து உத்தரவிட்டார். நாளை மாலை 6 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கரை ஆஜர்படுத்த அறிவுறுத்தினார்.

நீதிமன்றத்திற்குள் நுழையும் முன்னர் சவுக்கு சங்கர், திமுக அரசு தன்னை கண்டு அஞ்சுவதாலேயே நேற்று தேனியில் பதிவு செய்யப்பட்ட கஞ்சா வழக்கில், மீண்டும் இரண்டாவது முறையாக குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளதாக சத்தமாக கூறினார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன், ஒரே ஒரு வீடியோ தொடர்பாக 17 இடங்களில் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக கூறினார். திமுக அரசு சவுக்கு சங்கரை பழி வாங்குவதற்காக, தமிழக காவல்துறையை பயன்படுத்துவதாக குற்றம் சாட்டினார்.


ஊடகவியலாளரும், அரசியல் திறனாய்வாளருமான தம்பி சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை கடந்த வாரம் சென்னை உயர் நீதிமன்றம் ரத்துசெய்த நிலையில், தற்போது இரண்டாவது முறையாக குண்டர் சட்டத்தை ஏவியிருக்கும் திமுக அரசின் செயல் ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம்.பெண் காவலர்கள் குறித்துப் பேசியது உட்படப் பல்வேறு வழக்குகளில் தம்பி சவுக்கு சங்கர் பிணை பெற்றுள்ள நிலையில், குண்டர் சட்டமும் ரத்தாகியதால் ஒருசில நாட்களில் விடுதலையாகலாம் எனும் வாய்ப்பிருந்தபோது, இப்போது மீண்டும் குண்டர் சட்டத்தைப் பாய்ச்சியிருப்பது மோசமான சனநாயக விரோத நடவடிக்கையாகும். 

கஞ்சா வைத்திருந்தாரெனப் புனையப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கர் பிணை பெற்றுவிட்டப் பிறகும், அதனை அடிப்படையாகக் கொண்டு மீண்டும் குண்டர் சட்டத்தை செலுத்துவது அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு. சவுக்கு சங்கர் தவறாக பேசியதற்கு அவர் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு இந்தியத் தண்டனைச் சட்டமே போதுமானது என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும், அதனை மீறியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

மக்களுக்கெதிரான குற்றங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, பொது அமைதியைக் கெடுக்கும் சமூக விரோதிகள், வளக்கொள்ளையர்கள், வன்முறையாளர்கள், பாலியல் குற்றவாளிகள் போன்றோரைக் கைதுசெய்து ஓராண்டு முடக்குவதன் மூலம் குற்றங்களைத் தடுக்க பயன்படுத்தப்படும் குண்டர் எனும் தடுப்புக்காவல் சட்டத்தை, அவதூறு வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கர் மீது பயன்படுத்துவது வெளிப்படையான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகும். அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மேல் பொய்யாக வழக்குகளைப் புனைவதும், சிறைக்குள் வைத்துத் தாக்குவதும், பல முறை குண்டர் சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதுமான திமுக அரசின் தொடர் போக்குகள் யாவும் பாசிசத்தின் உச்சமாகும்.

ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு புலனாய்வுத்துறை, வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை (NIA) போன்ற அதிகார அமைப்புகளைப் பயன்படுத்தி எதிர்க்கட்சியினரையும், போராட்டக்காரர்களையும் முடக்குகிறதென்றால், தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசு உளவுத்துறையையும், காவல்துறையையும் பயன்படுத்தி ஊடகவியலாளர்களையும், சனநாயகச்சக்திகளையும் அச்சுறுத்த முற்படுகிறது. “சமூக வலைத்தளங்களை மக்களின் குறைகளை அறிந்துகொள்ள உதவும் கருவியாக அரசு பார்க்க வேண்டுமே ஒழிய, குறைகளைச் சொல்லும் நபர்களை அடக்கி ஒடுக்க முயற்சிக்கக்கூடாது” என சென்னை உயர்மன்றத்தின் மாண்பமை நீதிபதிகள் கூறியப் பிறகும், அடக்குமுறையை ஏவி, சவுக்கு சங்கரைப் பழிவாங்கத் துடிக்கும் திமுக அரசின் கொடுங்கோல் போக்கை வன்மையாக எதிர்க்கிறேன்.

ஆகவே, விடியல் அரசெனக் கூறிக்கொண்டு உபி யோகி ஆதித்தியநாத் ஆட்சியை பின்பற்றி, மக்களின் துன்பத் துயரங்களையும், அவலங்களையும், இன்னல்களையும் பேசுவோரின் குரல்வளையை நெரிக்கும் சகிப்புத்தன்மையற்ற திமுக அரசின் அடாவடித்தனங்களுக்கும், அட்டூழியப்போக்குகளுக்கும் மக்கள் முடிவுரை எழுதும் நாள் வெகுதொலைவில் இல்லையெனக் கூறி எச்சரிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow