தாலிக்கு தங்கம் திட்டம்..ஏழை தாயின் விண்ணப்பம் நிராகரிப்பு.. அரசுக்கு ஹைகோர்ட் நீதிபதிகள் உத்தரவு
கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது?என்று ஹைகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு கடந்த 2017-2021 வரை ஒதுக்கிய நிதி தொடர்பான விவரங்களை அறிக்கையாக தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை அண்ணா நகரை சேர்ந்த சித்ரா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், வீட்டு வேலைகள் செய்து மாதம் ரூ.6,000 வருமான ஈட்டி தன்னுடய பெண் குழந்தையை கல்லூரி வரை படிக்க வைத்துள்ளார்.
இந்நிலையில் தன் மகளுக்கு திருமண செய்து வைப்பதற்காக அரசின் தாலிக்கு தங்கம் திட்டமான மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தில் திருமண நிதியுதவி பெற கடந்த 2021ம் ஆண்டு விண்ணப்பித்துள்ளார். அதை பரிசீலித்த அயனாவரம் தாசில்தார், சித்ராவின் ஆண்டு வருமானம் ரூ.72,000-ஐ விட அதிகமாக இருப்பதாக கூறி விண்ணப்பத்தை நிராகரித்துள்ளார். ஆண்டு வருமானத்தை தவறாக குறிப்பிட்டுள்ளதாகவும், அதை திருத்தி இத்திட்டத்தில் தன்னுடைய மகள் திருமணத்திற்கு நிதியுதவி வழங்க உத்தரவிட வேண்டும் என சித்ரா மனுவில் கோரியிருந்தார்.
இந்நிலையில், இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்தின் கீழ் எத்தனை பேர் பயனடைந்துள்ளனர்? எத்தனை பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது? மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண திட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கிய நிதி எவ்வளவு? என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
What's Your Reaction?