சிறுநீரக மோசடி வழக்கு.. மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் மீது குற்றச்சாட்டு பதிவு!
சிறுநீரக மோசடி மூலம் சட்டவிரோத பணப்பரிவர்தனையில் ஈடுபட்ட வழக்கில் மருத்துவர் வி.எம்.கணேசன் அவரின் மனைவி உள்ளிட்ட மூன்று பேருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம், தர்மபுரி, ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த 2011 முதல் 2013 வரையிலான காலத்தில் நூற்றுக்கணக்கான ஏழை மக்களிடம் சிறுநீரக திருட்டு நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த புகாரில் தர்மபரி மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது.
காவல்துறை விசாரணையில் அங்கு பத்துக்கும் மேற்பட்ட பிரபல தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வி.எம்.கணேசன் மற்றும் சில மருத்துவர்கள் இடைத்தரகர்கள் ஈடுபட்டது கண்டுபிடிக்கபட்டு கைது செய்யபட்டனர்.
இந்த வழக்கின் அடிப்படையில் அமலாக்கதுறை சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு பதிவு செய்து. அமலாக்கதுறை தனது குற்றபத்திரிகையில் டாக்டர் வி.எம்.கணேசன், அவரின் மனைவியும் டாக்டர் என். விஷ்வாபிரியா மற்றும் டாக்டர் ஜி. திருமால் ஆகியோர் முறைகேடாக 81 நபர்களிடம் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்துள்ளனர் எனவும் இதன் மூலம் சுமார் 3 கோடி ரூபாய் சட்ட விரோத பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றஞ்சாட்டப்பட்ட மூன்று மருத்துவர்களும் நேரில் ஆஜராகி இருந்தனர். அவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் வழக்கின் சாட்சி விசாரணை வரும் ஏப்ரல் 8 தேதி தொடங்கும் என தெரிவித்த நீதிபதி விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தார்.
What's Your Reaction?






