டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. நீதிபதிகள் எடுத்த முடிவால் பரபரப்பு
டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியதற்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்குகளின் விசாரணையில் இருந்து நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு விலகுவதாக அறிவித்துள்ளது.

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. இதில், டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை மதுபான கடைகளுக்கு கொண்டு செல்வதற்கான போக்குவரத்துக்கு டெண்டர் வழங்கியது உள்ளிட்டவற்றில் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக அறிக்கை வெளியிட்டது.
அமலாக்கத் துறையின் இந்த சோதனையானது அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி கட்டமைப்புக்கு விரோதமானது என அறிவிக்கக் கோரியும், அரசு அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையினை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் டாஸ்மாக் அதிகாரிகளை துன்புறுத்த கூடாது என அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி தமிழக உள்துறை செயலாளரும், டாஸ்மாக் நிர்வாக இயக்குநரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில் குமார் அமர்வு, அமலாக்க துறை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். மேலும், அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், எந்த வழக்குகளின் அடிப்படையில் அமலாக்க துறை சோதனை நடத்தியது என்பது குறித்த விவரங்களையும் பதில் மனுவில் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் செந்தில் குமார் அமர்வு அறிவித்தனர். இச்சம்பவம் தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.
What's Your Reaction?






