ஆர்த்தியை பிரிந்த ஜெயம் ரவிக்கு இன்று 44வது பிறந்தநாள்.. பிரதர் படக்குழு கொடுத்த சர்ப்ரைஸ்
காதல் மனைவியை பிரிவதாக அறிவித்த ஜெயம் ரவிக்கு இன்றைய தினம் 44வது பிறந்தநாளாகும். அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லக்கூட முடியாத கவலையான மனநிலையில் இருக்கின்றனர் அவரது ரசிகர்கள். பிரதர் படக்குழு போஸ்டர் வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ரவி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மனைவியை பிரிவதாக அறிவித்த மறுநாளே பிறந்தநாள் வந்துள்ளதால் கொண்டாட்ட மனநிலையில் இருக்க மாட்டார் ஜெயம் ரவி. தனது சினிமா பயணத்தில் வெரைட்டியான நடிப்பை கொடுத்த ஜெயம் ரவிக்கு பிரதர் படக்குழு இன்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டவர் ஜெயம் ரவி. சாக்லேட் பாயாக காதல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஜெயம் ரவி தனி ஒருவன் படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக உருவெடுத்தார். மிருதன்,அடங்கமறு படத்தில் ஆக்சன் காட்சிகள் பலராலும் பாராட்டப்பட்டது. பொன்னியின் செல்வன் திரைப்படம் புதிய வளர்ச்சியை ஜெயம் ரவிக்கு கொடுத்தது. குடும்ப வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருந்த ஜெயம் ரவி மீது யார் கண் பட்டதோ புயல் வீச தொடங்கி விட்டது.
கடந்த சில மாதங்களாகவே ஜெயம் ரவி அவரது மனைவி ஆர்த்தி ரவிக்கு இடையே பிரச்சினை இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் நேற்றைய தினம்
தனது காதல் மனைவியான ஆர்த்தியை பிரிவதாக சமூக வலைதளம் மூலம் அறிவிப்பு வெளியிட்டார். அதை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சியும்,கவலையும் அடைந்தனர். இது தொடர்பாக நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில், “வாழ்க்கை என்பது பல்வேறு அத்தியாயங்களைக் கொண்ட ஒரு பயணம், ஒவ்வொன்றும் அதன் சொந்த சவால்கள் மற்றும் வாய்ப்புகளுடன் வருகிறது.
என்னுடைய பயணத்தை திரைப்படங்கள் வாயிலாகவும். திரையல்லாத இடங்களிலும் தொடர்ந்து பார்த்து வருபவர்களுக்கும், திரை துறை நண்பர்கள், பத்திரிக்கை, ஊடக துறை மற்றும் சமுக ஊடக நண்பர்கள், என் ரசிகர்கள் என அனைவரிடமும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருக்க முயற்சி செய்து வருகிறேன். எனவே, மிகவும் நெஞ்சம் கசந்த ஒரு தனிப்பட்ட செய்தியை உங்களுடன் பகிர வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன்.
நீண்டகால யோசனை, மற்றும் பல பரிசீலனைக்குப் பிறகு, ஆர்த்தி உடனான எனது திருமண வாழ்வில் இருந்து விலகுவது என மிகவும் கடினமான ஒரு முடிவை எடுத்துள்ளேன். இந்த முடிவு எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சார்ந்தவர்களின் நலனை கருத்தில் கொண்டும் அவர்களின் நல்வாழ்விற்காக எடுக்கப்பட்டது. இந்த நேரத்தில் எனது தனியுரிமையையும், எனக்கு நெருக்கமானவர்களின் தனியுரிமைகளுக்கு மதிப்பளிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த முடிவு எனது சொந்த முடிவாகும். இந்த விஷயம் என்னுடைய தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன். என்னுடைய முன்னுரிமை எப்போதும் எனது நடிப்பின் மூலம் எனது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு மகிழ்ச்சி மற்றும் பொழுதுபோக்கு அளிக்க வேண்டும் என்பதே.’நான் என்றும், எப்போதும் உங்கள் ஜெயம் ரவியாகவே இருக்க விரும்புகிறேன். நீங்கள் எனக்கு அளிக்கும் ஆதரவை நன்றியுடன் உணர்கிறேன், எனக்கு தொடர்ந்து ஆதரவு தந்தமைக்கு நன்றி,”என்று தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி தற்போது பிரதர், ஜீனி மற்றும் காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார். பிரதர் திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
இப்படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா இப்படத்தை தயாரித்துள்ளது.பிரதர் படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்த நிலையில். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்தது.
நடிகர் ஜெயம் ரவி இன்றைய தினம் தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை முன்னிட்டு பிரதர் படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு வாழ்த்தியுள்ளது.
What's Your Reaction?