புரட்டாசியா? பங்குனியா? அக்னியை கக்கும் அனல் வெயில்.. பல மாவட்டங்களில் சதமடித்தது!

தமிழ்நாட்டில் 13 இடங்களில் இன்று 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது.அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Sep 17, 2024 - 11:04
 0
புரட்டாசியா? பங்குனியா? அக்னியை கக்கும் அனல் வெயில்.. பல மாவட்டங்களில் சதமடித்தது!
today weather report

தமிழ்நாட்டில் பங்குனி, சித்திரை மாதம் போல புரட்டாசி மாதத்தில் வெயில் சுட்டெரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் பல ஊர்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டைதாண்டி வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னையில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. இது கடந்த 10 வருடங்களில் செப்டம்பர் மாதம் பதிவான அதிகப்பட்சமான வெப்பமாகும்.

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் வரும் 22ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு இன்று மற்றும் நாளை (16.09.2024 மற்றும் 17.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது ஓரிரு இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 முதல் 2 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு  சென்னை நுங்கம்பாக்கத்தில், 100.7 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியது. இது கடந்த 10 வருடங்களில் செப்டம்பர் மாதம் பதிவான அதிகப்பட்சமான வெப்பம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்றும் 101 டிகிரி பாரன்ஹீட் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் சென்னை உட்பட தமிழ்நாட்டின் 13 இடங்களில் 100 டிகி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104.54 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும், நாகை, தஞ்சை, ஈரோடு ஆகிய பகுதிகளில் தலா 102 டிகிரி பாரன்ஹீட்டும் பதிவாகியுள்ளது. சென்னையில் 101 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவானது.

இதையெல்லாம் விட தமிழ்நாட்டின் குளிர் பிரதேசங்களான வால்பாறையில் 80 டிகிரி பாரன்ஹீட், குன்னூரில் 75 டிகிரி பாரன்ஹீட், கொடைக்கானலில் 73 டிகிரி பாரன்ஹீட், ஊட்டியில் 67 டிகிரி பாரன்ஹீட் வெப்பமும் பதிவாகியுள்ளது.அக்னி நட்சத்திர காலம் போல அனல் காற்று வீசி வருவதால் மக்கள் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர். வெப்பத்தின் தாக்கம் அடுத்த ஒரு வார காலத்திற்கு நீடிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow