அரவிந்த் கெஜ்ரிவால் நாளை ராஜினாமா? நேரம் ஒதுக்கிய டெல்லி ஆளுநர்
ஆளுநரை சந்திக்க அரவிந்த் கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்த நிலையில் நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. ஆளுநரை நாளை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தன் பதவியை ராஜினாமா செய்வார் என்று அம் மாநில அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் கூறியுள்ளார். அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. டெல்லி துணைநிலை ஆளுநரை நாளை மாலை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அர்விந்த் கெஜ்ரிவால் அளிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டார். திகார் சிறையில் அடைக்கப்பட்ட அவரை சிபிஐயும் கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் கடந்த ஜூலை மாதமே ஜாமின் கிடைத்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் கடந்த 13ம் தேதி கெஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.
உச்ச நீதிமன்றம் தனது ஜாமின் உத்தரவில், ‘முதல்வர் அலுவலகத்துக்கு செல்லக்கூடாது, ஆவணங்களில் கையெழுத்து போடக்கூடாது என்பது உள்பட பல நிபந்தனைகள் விதித்தது. இதனால், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கெஜ்ரிவால் தார்மீகப் பொறுப்பேற்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன.
இதனை தொடர்ந்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் அடுத்த 2 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக நேற்று அறிவித்தார். நேர்மையானவன் என மக்கள் தனக்கு சான்றளித்தால் மட்டுமே மீண்டும் பதவி ஏற்பதாகவும் கூறி உள்ளார் கெஜ்ரிவால்.
இதனிடையே டெல்லி துணை நிலை ஆளுநரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார். ஆளுநரை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருந்த நிலையில் நாளை மாலை 4.30 மணிக்கு சந்திப்பு நடக்கிறது. துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவை நாளை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அரவிந்த் கெஜ்ரிவால் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அம் மாநில அமைச்சர் சௌரவ் பரத்வாஜ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது அரவிந்த் கெஜ்ரிவால் நாளை தன் பதவியை ராஜினாமா செய்வார் என்று அவர் தெரிவித்துள்ளார். டெல்லியின் அடுத்த முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி சுனிதா அல்லது அமைச்சர்கள் அதிஷி, கோபால் ராய் ஆகியோரில் ஒருவர் தேர்வு செய்யப்படும் வாய்ப்பு உள்ளது.
What's Your Reaction?