அவதூறு பரப்புவதில் திமுக பல அவார்டுகள் வாங்கி வைத்துள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார்.

Jul 11, 2024 - 16:10
 0
அவதூறு பரப்புவதில் திமுக பல அவார்டுகள் வாங்கி வைத்துள்ளது - ஜெயக்குமார் விமர்சனம்
சாட்டை துரைமுருகன் மற்றும் ஜெயக்குமார்

அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர் சாட்டை துரைமுருகன். 'சாட்டை' என்னும் பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வரும் இவர் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார். குறிப்பாக திமுக அரசு மீது ஏராளமான குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

இந்நிலையில், சாட்டை துரைமுருகன் இன்று காலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றாலத்தில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை திருச்சி போலீசார் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா போட்டியிட்டார். 

இதற்காக விக்கிரவாண்டி தொகுதியில், சாட்டை துரைமுருகன் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசை கடுமையாக சாடிய துரைமுருகன், அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்றார். மேலும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி குறித்தும், தமிழ்நாடு அரசு குறித்தும் கடுமையாக விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் திமுக அரசு சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டத் தவறி விட்டதாக சாட்டை துரைமுருகன் குற்றம்சாட்டி இருந்தார். மேலும், கொன்றவர்கள் வேறு நபர்கள், காவல் நிலையத்தில் சரண்டைந்தவர்கள் வேறு நபர்கள், என்றால் தமிழக அரசு உண்மைக் குற்றவாளிகளை தப்பிக்க வைக்க பார்க்கிறதா? என்றும் கேள்வி எழுப்பி இருந்தார். கடைசியாக விக்கிரவாண்டி இடைத்தேர்தலிலும் திமுக அரசு வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக அடுக்கடுக்கான புகார்களை கூறியிருந்தார். 

இத்தகைய புகார்களின் பேரில், திருச்சி சைபர் கிரைம் போலீசார் சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சியில் இருந்து வந்த சைபர் கிரைம் போலீசார், குற்றால அருவியில் தங்கி இருந்த சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது. சாட்டை துரைமுருகனின் கைதுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் சாட்டை துரைமுருகனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு‌ச்‌ செயலாளர் தம்பி சாட்டை துரைமுருகன் அவர்களை கைது செய்திருப்பது கருத்துரிமையின் கழுத்தை நெரிக்கும் செயல்! அவதூறு பரப்புவதில் அவார்டுகள் பல வாங்கி வைத்துள்ள இயக்கமே திமுக தான்!

சாட்டை சேனலில் திமுக அரசின் அவலங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தியதற்காகவும் மேடைகளில் ஸ்டாலின் அரசின் தோல்விகளை அடுக்கியதற்காகவும் தமிழ்நாட்டை சூறையாடி தின்று கொழுத்த திமுகவை விமர்சித்து வந்ததற்காகவும் பழிவாங்கி உள்ளது திறனற்ற திமுக அரசு!

பாசிச ஆட்சி நடத்தி கொண்டிருக்கும் ஸ்டாலின், அவருடைய ஆட்சிக்கான முடிவுரையே அவரே எழுதிக் கொள்ள ஆரம்பித்துவிட்டார்!!” என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow