எடப்பாடி பழனிசாமி உறவினரின் வீட்டில் வருமான வரி சோதனை... முக்கிய ஆவணங்கள் ஆதாரங்கள் பறிமுதல்..!
அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் தொடர்பான இடங்களில் நடந்த வருமான வரி சோதனையில் 10 கோடி ரூபாய் கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான ஆவணங்கள் ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஐந்து நாட்களாக வருமானவரித்துறை சோதனை தமிழகம் மற்றும் கர்நாடகாவில் 26 இடங்களில் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர் ராமலிங்கம். இவருக்கு சொந்தமான கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ராமலிங்கத்தின் மகன்களான சந்திரகாந்த் மற்றும் சூரியகாந்த் ஆகியோர் இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் அரசு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக அரசு அலுவலகங்கள் அரசின் முக்கிய கட்டுமானங்களை தமிழகத்திலும் மற்றும் கர்நாடகாவிலும் இந்த நிறுவனமானது மேற்கொண்டுள்ளது. இந்த நிறுவனம் மட்டுமல்லாது எஸ்.பி.எல் கன்ஸ்ட்ரக்ஷன் மற்றும் ஜே.ஆர். மெட்டல்ஸ் ஆகிய நிறுவனங்கள் தொடர்பான இடத்தில் நடைபெற்றது.
சென்னை ஈரோடு கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலும் மற்றும் கர்நாடகாவில் பெங்களூரிலும் இந்த சோதனை என்பது நடைபெற்றது. கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்த சோதனை நேற்று இரவு முடிவடைந்தது. ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு 152 கோடி கணக்கில் வராத பணம் கர்நாடகாவில் வருமானவரித்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்ட போது தமிழகத்தைச் சேர்ந்த ராமலிங்க கன்ஸ்ட்ரக்சன் நிறுவனத்திலிருந்து தான் இந்த பணம் கொண்டுவரப்பட்டதாக வருமானவரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பண மதிப்பிழப்பின் போது 2000 ரூபாய் நோட்டில் கோடிக்கணக்கான ரூபாய் இந்த நிறுவனத்தின் மூலம் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இரண்டாவது முறையாக வருமானவரித்துறை சோதனை என்பது நடத்தப்பட்டுள்ளது. கடந்த ஐந்து நாட்களாக நடத்தப்பட்ட சோதனையில் சுமார் 10 கோடி ரூபாய் அளவிலான கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மற்றும் வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் வரவு செலவு கணக்குகளை ஆய்வு செய்து பார்க்கும் பொழுது 750 கோடி ரூபாய் அளவில் ஆன வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரு மாநிலங்களில் அரசு ஒப்பந்தங்களை மேற்கொள்ளும் இந்த நிறுவனமானது முறையாக அரசு ஒப்பந்தங்களை கையாண்டுள்ளதா அதற்கு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்திருக்கிறார்களா என்ற பல்வேறு கோணத்தில் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து விசாரணை என்பது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஈரோடு அடிப்படையாகக் கொண்ட கட்டுமான நிறுவனத்தில் இருந்து கணக்கில் வராத பணம் பத்து கோடி ரூபாயும் மற்றும் 750 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?