எதிர்க்கட்சிகள் இல்லாத இடைத்தேர்தலா..? பாஜகவின் முக்கிய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.

Jan 12, 2025 - 16:41
 0
எதிர்க்கட்சிகள் இல்லாத இடைத்தேர்தலா..? பாஜகவின் முக்கிய அறிவிப்பு
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தெரிவித்துள்ளது

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன், திருமகன் ஈவெரா, ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில்  போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023-ஆம் ஆண்டு ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றார். 

சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக இவர் காலமானதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக உள்ளதாக  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் சார்பில் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சட்டப் பேரவை தொகுதி காலியாகும் பட்சத்தில் ஆறு மாத காலத்திற்குள் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இதையடுத்து, 
வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  

அதாவது, ஜனவரி 10-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. ஜனவரி 17-ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் ஆகும். வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜனவரி 18-ஆம் தேதி நடைபெறும் நிலையில் ஜனவரி 20-ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாகும். அடுத்து வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் பிப்ரவரி 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து, திமுக சார்பாக வேட்பாளராக சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுகவும், தேமுதிகவும் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை  உள்ளிட்டோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

அதில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை தேசிய ஜனநாயக கூட்டணி புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. 

சட்டமேதை அம்பேத்கர் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர். 

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின்போது பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம். 

வரும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல், அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு” என்று குறிப்பிட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow