கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.. ஹெச்.ராஜா-அண்ணாமலை மனிதரே இல்லை- சேகர் பாபு சாடல்

பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல, அவர்கள் இரட்டை நாக்கு உடையவர்கள் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்தார்.

Feb 5, 2025 - 14:59
 0
கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறார்கள்.. ஹெச்.ராஜா-அண்ணாமலை மனிதரே இல்லை- சேகர் பாபு சாடல்
அண்ணாமலை-சேகர் பாபு-ஹெச்.ராஜா

சென்னை ஓட்டேரி அருள்மிகு படவேட்டம்மன் திருக்கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, பொதுமக்கள், பக்தர்கள் என அனைவரின் தேவையையும் நிறைவேற்றி முதன்மையான அரசாக திராவிட மாடல் அரசு திகழ்கிறது. இதுவரை இரண்டாயிரத்து 504 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. 

ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான 49 திருக்கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. ஆதி படவேட்டம்மன் திருக்கோயில் குடமுழுக்கு வருகிற மார்ச் மாதம் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதுவரை ஏழாயிரத்து 154 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது. இந்தாண்டு இறுதிக்குள்  மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. திருப்பரங்குன்றம்  போராட்டத்தில் ஈடுபட்டவர்களை இந்து அமைப்பினர் என குறிப்பிட வேண்டாம் பாஜகவினர் என்று தான் குறிப்பிடுவேன்.

இந்த ஆட்சிக்கு ஒரு அபாயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். நேற்றைய போராட்டம் ஒரு தேவையற்ற போராட்டம். பாஜக தலைவர்கள் அண்ணாமலை மற்றும் ஹெச். ராஜாவிற்கு ஒன்று சொல்லிக் கொள்கிறோம்.  எங்கள் முதல்வர் எங்களை அமைதியாக இருக்க அறிவுறுத்தி இருக்கிறார். வட மாநிலத்தைப் போன்று கலவரத்தை ஏற்படுத்த நினைக்கிறீர்கள். 

எங்கள் முதல்வர் எங்கு கலவரம் ஏற்பட்டாலும் இரும்பு கரம் கொண்டு அடக்க தயாராக இருக்கிறார். பெரியார் மண்ணில் திராவிட மண்ணில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெருவதற்கு ஒரு காலமும் முதலமைச்சர் அனுமதிக்கப்பட்டார். திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்களும் இந்துக்களும் சகோதரத்துவம் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். திருப்பரங்குன்றம் போன்ற கோயில் பிரச்சனையை எடுத்ததால் பாஜக-விற்கு பூஜ்ஜிய வாக்கு சதவீதம் கூட கிடைக்கப்போவதில்லை.

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து அரசியல் குளிர்காய நினைக்கிறார்கள். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்படும். அண்ணாமலை மற்றும் ஹெச்.ராஜா ஒரு மனிதரே அல்ல, அவர்கள் இரட்டை நாக்கு உடையவர். இனத்தால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறார்.‌ துறை அமைச்சர் என்ற முறையில் விரைவில் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்ல உள்ளேன்.

கடந்த காலங்களில் சரியான திட்டமிடல் இல்லை. அதனால் தான் திட்டங்கள் காலதாமதம் ஆகிறது. வருகிற ஏப்ரல் - மே மாத இறுதிக்குள் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow