Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்.. மத்திய சுகாதாரத்துறை அதிரடி

Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Sep 24, 2024 - 10:06
Sep 24, 2024 - 13:12
 0
Tirupati Laddu Issue : திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்.. மத்திய சுகாதாரத்துறை அதிரடி
திருப்பதிக்கு நெய் சப்ளை செய்த நிறுவனத்துக்கு நோட்டீஸ்

Tirupati Laddu Issue : ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி என்றாலே வெங்கடாசலபதிக்கு பிறகு பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கு நினைவில் நிற்பது திருப்பதி லட்டுதான். ஆந்திரப் பிரதேச மாநிலம், திருப்பதி மாவட்டத்தில் உள்ள திருமலை வெங்கடேஸ்வரா கோயிலில் தரிசனம் செய்த பிறகு பக்தர்களுக்கு திருப்பதி லட்டு அல்லது ஸ்ரீவாரி லட்டு பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதும். ஏழுமலையானை தரிசிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட ஆகும்.

தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள், சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மக்களிடம் செல்வாக்கு பெற்ற, தனித்துவ சுவை கொண்ட திருப்பதி கோயில் லட்டை யாரும் விரும்பாமல் இருக்க முடியாது.

இதற்கிடையே திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் ஹாட் டாபிக் ஆக உள்ளது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி கோயிலில் லட்டு தயாரிக்க விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தி வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார்.

இதை உறுதிப்படுத்தும் விதமாக திருப்பதி லட்டுவில் மாடு மற்றும் பன்றிக் கொழுப்பு இருந்தது ஆய்வில் உறுதியாகியுள்ளதாக சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி சில நாட்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டு இருந்தது. அதாவது திருப்பதி லட்டுகள் செய்ய பயன்படுத்தும் நெய்யில் மீன் எண்ணெய், மாட்டிறைச்சி கொழுப்பு, பன்றிக்கொழுப்பு என விலங்குகளின் கொழுப்புகள் கலக்கப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரியவந்தது.

இது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் களத்திலும் திருப்பதி லட்டுகள் குறித்த பேச்சுதான் உலவி வருகிறது. இந்த ஆய்வு அறிக்கை உண்மை என்றால் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில் தவறிழைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்கள் முதல் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வரை பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். திருப்பதி லட்டு விவகாரம் இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. 

இந்நிலையில், திருப்பதி லட்டு செய்வதற்கு நெய் சப்ளை செய்த திண்டுக்கல் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும் அந்த நிறுவனத்தின் நெய் மற்றும் பால் பொருட்களை ஆய்வுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

இதனிடையே விளக்கம் கேட்டு திண்டுக்கல் ஏ.ஆர். டெய்ரி நிறுவனத்துக்கு மத்திய சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திருப்பதி லட்டு தயாரிக்க நெய் சப்ளை செய்த 4 நிறுவனங்களிடம் இருந்து மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow