அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா.. வாய்ப்பில்லை ராஜா..எடப்பாடி பழனிச்சாமி சொன்ன காரணம்

ஓ.பன்னீர் செல்வத்தை மீண்டும் அதிமுகவில் சேர்க்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். ஜானகி அம்மா எப்படி ஜெயலலிதாவிடம் கட்சியை ஒப்படைத்து விட்டு ஒதுங்கி கொண்டாரோ அதேபோல சசிகலா நடந்து கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

Jul 5, 2024 - 15:07
 0
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், சசிகலா.. வாய்ப்பில்லை ராஜா..எடப்பாடி பழனிச்சாமி சொன்ன காரணம்
Edappadi palanisamy vs OPS

எடப்பாடி பழனிச்சாமி இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம், ஓ.பன்னீர் செல்வத்தை  மீண்டும் கட்சியில் இணைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி,  “அதிமுக கட்சி, கடையில் விற்கும் பொருளல்ல; கட்சிக்கு விரோதமாக ஓபிஎஸ் செயல்பட்டதால் தான், அதிமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். இதை நானோ, வேலுமணியோ செய்யவில்லை. அதிமுக தொண்டர்களின் எண்ணத்திற்கு ஏற்ப, பொதுக்குழு உறுப்பினர்கள் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய பின் நீக்கப்படுகிறார்.

சசிகலா குறித்த கேள்விக்கு பதில் அளித்த எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா எப்படி அதிமுகவை ஒன்றிணைக்க முடியும்? அவரே கட்சியில் இல்லை. பின் எப்படி ஒருங்கிணைப்பார்? அதுமட்டுமல்லால் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். அதில் அவர் என்ன சொல்கிறார் என்றால் ‘அம்மா உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாகச் செயல்பட்டேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கின்றேன்.

நான் என்றும் பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காவோ ஆசைப்பட்டதில்லை’ என்று ‘நான் பதவியில் இல்லை’ என்பதை அவரே அப்போது அறிவித்துவிட்டார். பின் மூன்று வருடம் கழித்து மீண்டும், ரீ எண்ட்ரி கொடுக்க இது ஒன்றும் கார்ப்பரேட் கம்பெனியல்ல; கட்சி. அவர்கள் உண்மையிலேயே அதிமுகவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமையவேண்டும் என்று மனதார எண்ணினால், கட்சி இரண்டாக பிளவுபட்டபோது, ஜானகி அம்மா ஒரு அறிக்கை வெளியிட்டார். ‘அம்மா அவர்கள் தான் இக்கட்சியை ஏற்று நடத்துவார்கள். நான் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பேன். அனைவரும் ஒருமித்த கருத்துடன் செயல்பட்டு புரட்சித்தலைவர் ஆட்சி அமைக்க வேண்டும் என்று சொன்னார். அந்த நல்லெண்ணத்தின் அடிப்படையில் செயல்பட்டால் நன்றாகயிருக்கும் என தொண்டர்கள் கருதுகிறார்கள்” என்றார்.


தொடர்ந்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி,திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பல்வேறு துறைகளில் சம்பாதித்த சுமார் முப்பதாயிரம் கோடி பணத்தை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியை அன்றைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோ மூலமாக தெரிவித்தார். அந்த உண்மைகள் எல்லாம் எங்கள் ஆட்சி அமைந்தபின் வெளிவரும்.காலத்தால் அழியாத கல்விச் செல்வத்தைக் கொச்சைப்படுத்திப் பேசியுள்ளார், ஆர்.எஸ் பாரதி. அண்மைக்காலமாக அவர் இதுபோல் நிறையப் பேசுகிறார். வயது முதிர்வின் காரணமாக அவர் இவ்வாறெல்லாம் பேசுகிறார் என்று நினைக்கிறேன். அவருடைய பேச்சு, பட்டம் படித்தவர்களைக் கேவலப்படுத்துவதாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது. இதற்கு பட்டம் படித்தவர்கள் எதிர்காலத்தில் தகுந்த பதிலடிக் கொடுப்பார்கள்.

ஆனைமலையில் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களைச் சந்திக்க எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றபோது, அவர்களைக் கூட அனுமதிக்கவில்லை. அதுமட்டுமில்லாமல் விழுப்புரத்திலும் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடலூர் பெட்ரோல் பங்க் ஒன்றில் இரண்டாயிரம் லிட்டர் மெத்தனால் பதுக்கி வைத்திருந்ததாகவும், ஆந்திராவிலிருந்து திருத்தணிக்கு 25 லிட்டர் கள்ளச்சாராயம் கடத்தப்பட்டுள்ளதாகவும் செய்தி வந்துள்ளது. எனவே, தொடர்ந்து தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் சிலவற்றைப் பிடிக்கிறார்கள். சிலவற்றை பிடிப்பதில்லை. 

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது. எங்குப் பார்த்தாலும் கொலை, கொள்ளை, திருட்டு, பாலியல் வன்கொடுமைகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இந்த அரசு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் இன்று தமிழ்நாட்டை ஆள்வதால் தான், இன்று சட்ட ஒழுங்கு அதளபாதாளத்திற்குச் சென்றுள்ளது.கோவை, நெல்லை என்று மட்டுமில்லை, தமிழ்நாடு முழுவதும் இருக்கின்ற மேயர்கள், திமுக இருக்கின்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்கின்ற ஊழலுக்கு அளவே இல்லை‌. அதை பத்திரிக்கை நண்பர்கள் தான் நடுநிலையோடு வெளியில் கொண்டுவர வேண்டும். இங்கு நடக்கிற ஊழல்களைப் பத்திரிகை நண்பர்கள் வெளிப்படுத்தினால், திமுக அரசு காணாமல் போய்விடும். அந்தளவுக்கு ஊழல் மலிந்த அரசாக இந்த அரசு உள்ளது‌ என்று கடுமையாக சாடினார் எடப்பாடி பழனிச்சாமி.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow