திமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. அமெரிக்காவில் இருந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. உதயநிதி சொல்வது என்ன?

அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் முதல்வர் ஸ்டாலின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

Sep 9, 2024 - 06:32
Sep 9, 2024 - 07:12
 0
திமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. அமெரிக்காவில் இருந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. உதயநிதி சொல்வது என்ன?
DMK Leader MK Stalin

சென்னை: தமிழ்நாட்டில் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றது போல், சட்டப்பேரவை தேர்தலிலும் இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக தீவிரமாக உள்ளது.

இதனால் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலுக்கு திமுக இப்போதே தயாராகி வருகிறது. அதாவது சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள செய்ய வேண்டிய மாறுதல்கள் குறித்து தலைமைக்கு பரிந்துரை செய்ய ஒருங்கிணைப்பு குழுவை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அமைத்தார். இந்தக் குழுவில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த ஒருங்கிணைப்பு குழு திமுகவை சார்ந்த சார்பு அணிகளுடன் ஆலோசனை நடத்தியது. சட்டப்பேரவை தேர்தலை எப்படி எதிர்கொள்வது? எந்தெந்த மாற்றங்கள் செய்யலாம்? மக்களிடம் பிரசாரத்தை எப்படி முன்னெடுத்து செல்ல வேண்டும்? என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை கேட்டறிந்தது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் அமெரிக்காவில் உள்ள நிலையில், ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் காணொளி வாயிலாக உதயநிதி ஸ்டாலின், கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் பங்கேற்றனர். அப்போது முதல்வர் ஸ்டாலின் ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து பேசினார். மேலும் திமுக முப்பெரும் விழா ஏற்பாடுகள், பவளவிழா ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

* மாநிலம் முழுவதும் நடைபெறும் பொது உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்தும் விவரங்களைக் கேட்டறிந்தார்.

* பவளவிழாவையொட்டி கழகத்தினரின் வீடுகள்-அலுவலகங்கள்-வணிக வளாகங்களில் கொடிகளை பறக்கவிட வேண்டும் என்று தெரிவித்தார். 

* அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

* அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

* சிகாகோவில் தமிழர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சி மிகச் சிறப்பாக இருந்ததாக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். 

இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்ட முதல்வர் ஸ்டாலின், ''திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டு நிறைவு விழா; முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தகட்டப் பணிகள் குறித்து ஆலோசித்தோம்'' என்றார். 

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், ''தி.மு.கழகத்தின் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழுவின் பணிகளை ஆய்வு செய்யும் விதமாக, கழகத் தலைவர் - முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக நடத்தியக் கூட்டத்தில் பங்கேற்றோம்.

சட்டமன்றத் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் இதுவரை கழகத்தின் 11 சார்பு அணிகளின் நிர்வாகிகளை சந்தித்து, அவர்களின் பணிகளை ஆய்வு செய்தது தொடர்பான விவரங்களையும் - அடுத்து திட்டமிடப்பட்டுள்ள ஆலோசனைக் கூட்டங்கள் பற்றியும் தலைவரிடம் எடுத்துக்கூறினோம். 

2026 சட்டமன்றத் தேர்தலிலும் கழகத்தினை வெற்றி பெறச் செய்திட, தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் பற்றி தலைவர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும், கழகத்தின்  ‘பவள விழா’ ஆண்டினை மக்கள் போற்றும் வகையில் கொண்டாடிடவும் - கழகத்தின் ‘முப்பெரும் விழா’ சிறக்கவும் ஆக்கப்பூர்வமானக் கருத்துக்களை எடுத்துரைத்து உற்சாகப்படுத்தினார்கள்'' என்றார்.  முதல்வர் ஸ்டாலின் தமிழ்நாடு திரும்பியதும் திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக்குழு வழங்கும் எனவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow