“இனி வெளிநாடுகளுக்கு பறக்க உள்ளது ஆவின்” - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை!

ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருவதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

Sep 10, 2024 - 17:04
Sep 11, 2024 - 09:48
 0
“இனி வெளிநாடுகளுக்கு பறக்க உள்ளது ஆவின்” - அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை!
அமைச்சர் மனோ தங்கராஜ் ஆலோசனை

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா மற்றும் பால் உற்பத்தியாளர்கள் உடனான கலந்துரையாட நிகழ்ச்சி ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், ரூ. 1.50 கோடி மதிப்பிலான நல திட்ட உதவிகளை வழங்கினார். 

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜிடம் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுகவிற்கு விசிக அழைப்பு விடுத்தது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதில் எனது தனிப்பட்ட கருத்தாக சொல்கிறேன். இதை நான் பெரிதாக சொல்லல. ஆனால் இதனை சமூகத்தில் மாற்றத்தின் மூலமாகத்தான் கொண்டு வரவேண்டும். கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் முடியாது. இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சனை என்பதால் அவர்களும் இந்த சிஸ்டத்தில் ஒரு பார்ட் என்பதால் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அந்த வகையில் யாரை வேணா கூப்பிடலாம் தவறு இல்லை. இது சமூகப் பிரச்சனை தானே தவிர அரசியல் கிடையாது” என விளக்கமளித்தார். 

இதையடுத்து நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தது குறித்து பேசிய அவர், “இது ஒரு ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். ஒரு கட்சி நிலைக்க வேண்டும் என்றால் என்ன கொள்கையை முன் வைக்கிறது என தெரிய வேண்டும். என்ன கொள்கைக்காக? என்ன காரணத்திற்காக? வருகிறார்கள் என சொல்ல வேண்டும். ஆனால் அவர்கள் இதுவரை என்ன கொள்கை, எந்த பிரச்சனைக்காக குரல் கொடுக்கிறோம் என சொல்லவில்லை. இதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும் பிறகு பொறுத்திருந்து பார்க்கலாம்” என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், “நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த பால் கூட்டுறவு சங்கங்களை லாபத்திற்கு அழைத்து வந்துள்ளோம். கடந்த ஆண்டு விற்பனை 20% கூடியது இந்த ஆண்டு இன்னும் அதிகரிக்கும். மேலும் பால் கொள்முதலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் லிட்டரில் இருந்து 2 லட்சமாக உயர்த்தி உள்ளோம். ஒரு ஆண்டுக்கு 12 லட்சம் கொள்முதல் செய்துள்ளது. ஆவினுக்கு தனியார் துறையாலோ மற்ற துறையாலோ எந்த அச்சுறுத்தலும் இல்லை. விற்பனை அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க: “குரங்கம்மை அறிகுறி... 104-க்கு கால் பண்ணுங்க!” - பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் வலியுறுத்தல்

மேலும் ஆவின் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது பற்றி ஆலோசித்து வருகிறோம். இன்டர்நேஷனல் மார்க்கெட்டில் நல்ல வரவேற்பு உள்ளது. நம்ம நாட்டின் ஐஸ்கிரீம் நல்ல குவாலிட்டியோட உள்ளது. ஐஸ்கிரீம் மற்றும் நெய்க்கு நல்ல டிமாண்ட் உள்ளது" என கூறினார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow