தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.... வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!

எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Jul 7, 2024 - 08:53
 0
தலைமறைவான எம்.ஆர்.விஜயபாஸ்கர்.... வீடு, அலுவலகங்களில் சிபிசிஐடி போலீசார் அதிரடி சோதனை!
எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் மாவட்டம் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர் மற்றும் அதே மாவட்டம் வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் ஆகியோர் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  கரூர் போலீசில் பரபரப்பு புகார் கொடுத்தனர். 

கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த  பிரகாஷ்,'' தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி மற்றும் ஆதரவாளர்கள் ஆகியோர் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாக பத்திரப்பதிவு செய்து உள்ளனர்'' என்று கூறியிருந்தார்.

இதேபோல் சார்பதிவாளர் முகமது அப்துல்காதர், ''போலி சான்றிதழ் கொடுத்து 22 ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்த ரகு என்பவர் மீதும், இந்த விவகாரத்தில் தன்னை மிரட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கரூர் நகர போலீசில் புகார் கொடுத்திருந்தார். 

இந்த புகார்களின் பேரில் வாங்கல் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த 1ம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது  6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. 

இந்த வழக்கில் தான் கைது செய்யப்படலாம் எனக்கருதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கேட்டு கரூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். கடந்த 19ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிமன்றம் தள்ளிவைத்தது. 

இதன்பிறகு கடந்த 25ம் தேதி ஜாமீன் மீதான வழக்கை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். கைது செய்யப்படுவதை தவிர்க்க எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவாக உள்ள நிலையில் சிபிசிஐடி போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையே தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தனது தந்தையை கவனித்துக் கொள்ள இடைக்கால ஜாமீன் மனுவை கரூர் நீதிமன்றத்தில் எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்தார். 

ஆனால் அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி சண்முகசுந்தரம், மனுவை தள்ளுபடி செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டார். இந்நிலையில், எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

அதாவது கரூரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு, நிறுவனங்கள் என 10க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும்  சிபிசிஐடி போலீசார் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow