காவிரி பிரச்சினை..மேகதாது அணை கட்ட கர்நாடகாவிற்கு அனுமதி தராத மத்திய அரசு.. குட் நியூஸ்
Central Government on Meghadatu Dam in Karnataka : மேகதாது அணையை ஆரம்ப கட்டத்தில் இருந்தே தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை.
Central Government on Meghadatu Dam in Karnataka : தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்னை சுமார் 50 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மறுத்து, காவிரி நீரின் முழு உரிமையும் தங்களுக்கே என்பது போல கர்நாடகா நடந்துகொள்வதுதான் இதற்கு முழு காரணமும். காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டாலும், இன்னும் பிரச்னை தீர்ந்தபாடில்லை.
இதனிடையே காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் 60 டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்கும் வகையில் 9,000 கோடி ரூபாய் செலவில் கர்நாடக அரசு அணை கட்ட கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணையால் கர்நாடகாவை விட தமிழகத்திற்குதான் அதிக நன்மை என்று கர்நாடகா கூறி வருகிறது. அண்மையில் கூட மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்தார்.
ஆனால், ஏற்கனவே உள்ள அணைகளில் இருந்தே தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடகா, இன்னொரு அணையைக் கட்டினால் தற்போது வரும் கொஞ்ச நஞ்சம் உபரி நீரும் கூட வராது என்பதே தமிழகத்தின் எண்ணமாக உள்ளது. இதனால் மேகதாது அணையை ஆரம்ப கட்டத்தில் இருந்தே தமிழ்நாடு கடுமையாக எதிர்த்து வருகிறது. அதே சமயம் மேகதாது அணைக்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை என்பதால், அணை கட்டுமானப் பணிகளை கர்நாடக அரசால் மேற்கொள்ள முடியவில்லை.
இந்த சூழலில் மேகதாது அணை தொடர்பாக ஆர்டிஐ மூலம் சில தகவல்கள் கோரப்பட்டன. அதில், காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்ட கர்நாடக மாநிலத்தால் தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்துள்ள மத்திய அரசு, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகா மாநில அரசுக்கு மத்திய நீர்வள ஆணையம் எந்த ஒப்புதலையும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளது. தமிழ்நாடு - கர்நாடகா இடையே காவிரி பிரச்னை முற்றியுள்ள நிலையில், மத்திய அரசின் இந்த பதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
What's Your Reaction?