திருப்பதி கோயிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்.. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!

திருப்பதி என்று சொன்னாலே உடனே நமது நினைவுக்கு வருவது லட்டு. நமது உறவினர்கள், நண்பர்கள் யாரும் திருப்பதி கோயிலுக்கு சென்று விட்டு வந்தால், நாம் முதலில் கேட்பது லட்டு எங்கே? என்றுதான். தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள் பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன.

Aug 29, 2024 - 19:47
Aug 29, 2024 - 20:14
 0
திருப்பதி கோயிலில் லட்டு வாங்க ஆதார் கட்டாயம்.. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு!
Tirupati Temple Laddu

திருப்பதி: ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதியில் உலகப் புகழ்பெற்ற ஏழுமலையான் கோயில் உள்ளது. திருமலையில் அமைந்துள்ள இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் 50,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அதுவும் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் திருப்பதி கோயிலில் கூட்டம் அலைமோதும். ஏழுமலையானை தரிசிக்க இரண்டு அல்லது மூன்று நாட்கள் கூட ஆகும்.

திருப்பதி என்று சொன்னாலே உடனே நமது நினைவுக்கு வருவது லட்டு. நமது உறவினர்கள், நண்பர்கள் யாரும் திருப்பதிக்கு சென்று விட்டு வந்தால், நாம் முதலில் கேட்பது லட்டு எங்கே? என்றுதான். திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பிரசாதமாக லட்டு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தனித்துவ சுவை கொண்ட திருப்பதி லட்டுகள், சுவாமி ஏழுமலையானை போன்றே பக்தர்களிடம் மிகவும் செல்வாக்கு பெற்று விளங்குகின்றன. திருப்பதியில் நாள்தோறும் 2.8 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், சுவாமி தரிசனம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு 2 லட்டுகள் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இது தவிர கூடுதல் லட்டுகள் தேவை என்றால் தேவஸ்தான கவுண்ட்டர்களில் ரூ.50 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். 

ஆனால் ஒரு நபருக்கு அதிகமாக லட்டுகளை இடைத்தரர்கள் மூலமாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், திருப்பதியில் லட்டு வாங்க ஆதார் அட்டை கட்டாயம் என்று திருமலை-திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி வெங்கையா சவுத்ரி கூறுகையில், ''திருப்பதியில் இன்று முதல் லட்டு வாங்க பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம் ஆகும். 

சுவாமி தரிசனம் செய்தபிறகு லட்டு வாங்க வரும் பக்தர்களுக்கு வழக்கம்போல் லட்டு விற்பனை செய்யப்படும். ஆனால் சுவாமி தரிசனம் செய்யாமல் லட்டு மட்டும் கேட்கும் பக்தர்களுக்கு ஆதார் அடிப்படையில் ஒரு ஆதாருக்கு கூடுதலாக இரண்டு லட்டுகள் மட்டுமே வழங்கப்படும். லட்டுக்களை வாங்கி கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சுவாமி தரிசனத்துக்கு பிறகு டிக்கெட்டுகளை கொண்டு  வரும் பக்தர்களுக்கு லட்டு தயாரிப்பு,  அன்றைய நாளில் அதற்கு உள்ள தேவை ஆகியவற்றின் அடிப்படையில் லட்டு விற்பனை செய்யப்படும். அதே வேளையில் சுவாமி கும்பிடாமல் லட்டு மட்டுமே தேவை என்ற வருபவர்கள் அவர்களுடைய ஆதார் அட்டையை கவுண்டர்களில் சமர்ப்பித்து இரண்டு லட்டுக்களை மட்டும் வாங்கிச் செல்லலாம். 

இதனால் கவுண்ட்டர்களில் லட்டுக்களை மட்டும் வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்யும் நபர்களில் ஆதார் எண்கள் அடிக்கடி பதிவாகும். அதனால் அவர்களை பொறிவைத்து பிடிக்க முடியும். மேலும் கள்ளச்சந்தை லட்டு வியாபாரத்தை ஒழித்து கட்டவும் முடியும்'' என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow